”கர்நாடகாவில் கமல் படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம்” - கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பு
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்சைக்குள்ளானது. இதையடுத்து கர்நாடகாவில் கமலின் பேச்சை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமமையா கமலின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திரையிடக் கூடாது மீறி திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என்று கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா மிரட்டல் விடுத்துள்ளார்.
தன் பேச்சுக்கு நடிகர் கமல் மன்னிப்பு கேட்காமல், முரண்டு பிடிக்கிறார். இனியும் அவர் இதே மனப்போக்கை தொடர்ந்தால், கர்நாடகாவின் எந்த திரையரங்குகளிலும், அவர் நடித்துள்ள 'தக் லைஃப் திரைப்படத்தை திரையிடக் கூடாது. இதற்கு நாங்கள் வாய்ப்பளிக்கமாட்டோம்.
ஒருவேளை திரையிட்டால், அந்த திரையரங்கிற்கு தீ வைப்போம். இதற்காக எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து கொள்ளட்டும். எங்களுக்கு கவலை இல்லை. கமல், தமிழ் திரையுலகில் பெரிய நடிகர். அவர் மீது எங்களுக்கு அதிகமான மதிப்பு இருந்தது. ஆனால், தமிழர்களை கவர, கன்னடத்துக்கு எதிராக பேசியுள்ளார்.
மற்ற மொழிகளைப் பற்றி பேசும்போது, குறைந்தபட்ச அறிவு இருக்க வேண்டும். இவர் நடிக்கும் திரைப்படத்தை கர்நாடக மாநிலத்தில் திரையிடக் கூடாது என நாராயண கவுடா தெரிவித்துள்ளார்.