மம்தாவை தரக்குறைவாக விமர்சித்த மத்திய அமைச்சர்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய திரிணாமுல் காங்கிரஸ்!

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை, சர்ச்சைக்குரிய வகையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்ததால் பாஜகவுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
மம்தா பானர்ஜி, கிரிராஜ் சிங்
மம்தா பானர்ஜி, கிரிராஜ் சிங்ட்விட்டர்

டிசம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, மகேஷ் பட், அனில் கபூர் மற்றும் பலருடன் இணைந்து அவர் மேடையில் நடனமாடினார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, மம்தா பானர்ஜி திரைப்பட விழாவில் பங்கேற்று நடனமாடுவது ஏற்புடையதல்ல என ஒரு நேர்காணலின்போது மத்திய இணை அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து தெரிவித்திருந்தார். அதோடு சில சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கருத்து தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா, “நாட்டிலுள்ள ஒரே பெண் முதல்வரை குறித்து மத்திய அமைச்சர் அவதூறாகப் பேசியுள்ளார். அவருடைய பேச்சு வெட்கக்கேடானது. இது, பெண்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு. இதுபோன்ற வார்த்தைகளைத்தான் பயன்படுத்த வேண்டுமா? இது, பாஜக மற்றும் அக்கட்சியின் அமைச்சர்களிடம் உள்ள பிரச்னை. பெண்கள் அதிகாரத்தில் இருப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” எனக் கடுமையான கணடனத்தைப் பதிவுசெய்திருந்தார்.

இதையும் படிக்க: மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி, "எனக்கு நடனமாடத் தெரியாது. சில சமயங்களில் பழங்குடியினருக்கு ஆதரவாக நடனமாடுவேன். அன்று, அனில் கபூர் என்னை மேடைக்கு அழைத்துச் சென்றார். நாங்கள் பாலிவுட்டை மதிக்கிறோம். மற்றப்படி எதுவும் கிடையாது” எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய கிரிராஜ் சிங், “டிஎம்சி தலைவர்கள் எனது வார்த்தைகளை பெரிதுபடுத்துகிறார்கள்” என்று விளக்கமளித்திருந்தார். எனினும் இந்தப் பிரச்னை அணைந்தபாடில்லை. மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை கண்டித்து, திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (டிச.7) போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது அமைச்சர் கிரிராஜ் சிங்கை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென பெண் எம்.பி.க்கள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி கோஷமிட்டனர்.

இதையும் படிக்க: குஜராத் | பாக்கெட்டில் ரூ 1.14 லட்சம்.. ஆனாலும் பட்டினியால் மரணித்த யாசகர்! அதிர்ச்சி பின்னணி..

அதுபோல் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் இவ்விவகாரம் தொடர்பாக அமளி நிலவியது. கிரிராஜ் சிங் கூறிய கருத்துக்கு எதிராக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இன்று, கேள்வி நேரம் முடிந்ததும், பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷஷி பாஞ்சா இந்த விவகாரத்தை சபையில் எழுப்பினார். கிரிராஜ் சிங்கின் கருத்துக்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், நாட்டின் ஒரே பெண் முதல்வரான மற்றும் பல முறை எம்.பியாக இருந்துள்ள பானர்ஜியை, மத்திய அமைச்சரின் பெண் வெறுப்பு பேச்சை நாங்கள் கண்டிக்கிறோம்.

கிரிராஜ் சிங் கூறிய கருத்துக்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். ஷஷி பாஞ்சா இந்தப் பிரச்னையை எழுப்பியவுடன், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக ஆகிய இருகட்சிகளின் எம்.எல்.ஏக்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் சபை அமளியில் மூழ்கியது.

இதையும் படிக்க: தெலங்கானா: முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com