குஜராத் | பாக்கெட்டில் ரூ 1.14 லட்சம்.. ஆனாலும் பட்டினியால் மரணித்த யாசகர்! அதிர்ச்சி பின்னணி..

குஜராத்தில் யாசகர் ஒருவர் ரூ.1.14 லட்சம் பணம் கையில் வைத்திருந்தும் பட்டினியால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
model image
model imagefreepik

எவ்வளவு பணம் இருந்தாலும், அதைக் கொண்டு தம்மைக் கவனித்துக்கொள்ள ஓர் ஆள் இல்லை என்றால், அதனால் உடல்நலப் பாதிப்புகள்தான் ஏற்படும். ஏன், இன்னும் சொல்லப்போனால் உயிர்கூட பறிபோகும் நிலைக்கு ஆளாகிவிடும். அப்படியான ஒரு சம்பவம்தான் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

model image
model imagefreepik

குஜராத்தின் வல்சாத் என்ற பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், யாசகம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவர், உணவு இல்லாமல் இருந்ததால், அவரது உடல்நிலை மோசமாகி உள்ளது. இதைக் கவனித்த அருகில் இருந்த கடைக்காரர், காவல் துறைக்கு தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது, அந்த பெரியவர் காந்தி நூலகம் அருகே பசியுடன் உடல்வாடிய நிலையில் படுத்துள்ளார். மருத்துவக் குழுவினருடன் அவரை மீட்ட போலீசார், உடனே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிக்க: மீண்டும் ஓர் எல்லை தாண்டிய காதல்: ஐந்தரை ஆண்டு காத்திருப்புக்குப் பின் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண்!

இதுகுறித்து மருத்துவக் குழுவினர், “அவருக்கு இந்தி தெரியவில்லை.. குஜராத்தி மொழி பேசினார். வல்சாத்தில் உள்ள தோபி தலாவ் பகுதியில் தங்கியிருப்பதாகக் கூறினார். இரண்டு நாட்களாக அவர் ஒரே இடத்தில் படுத்துக் கிடந்தார். நாங்கள் உடனடியாக அவரை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போதுதான் அவரிடம் 1.14 லட்ச ரூபாய் பணம் இருந்ததை நாங்கள் கவனித்தோம். இந்த நோட்டுகளை அவர் பிளாஸ்டிக் பைகளில் சுற்றி தனது ஸ்வெட்டர் மற்றும் பேன்ட் பாக்கெட்டுகளில் வைத்திருந்தார். அதையும் நாங்கள் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டோம்" என்றார்.

யாசகர் வைத்திருந்த நோட்டுகள்
யாசகர் வைத்திருந்த நோட்டுகள்

இதுதொடர்பாக சிகிச்சையளித்த மருத்துவர், “அந்த முதியவர் மிக மோசமான நிலையில்தான் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். வந்தவுடன் அவர் முதலில் எங்களிடம் தேநீர் கேட்டார். அவர் பசியுடன் இருப்பதையும் அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். நாங்கள் உடனடியாக சிகிச்சையை ஆரம்பித்தோம். இருப்பினும், அவர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். அவர் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்ததே, அவரது உயிரிழப்புக்குக் காரணம்" என்றார்.

இதையும் படிக்க: சுட்டுக் கொல்லப்பட்ட கர்னி சேனா தலைவர்! வெடித்த போராட்டம்; பரபரப்பில் ராஜஸ்தான்..ஆலோசனையில் ஆளுநர்!

உயிரிழந்த அந்த யாசகர் யார், அவரது பெயர், குடும்பம், அவர் எங்கே வசிக்கிறார் என எதுவும் உறுதி செய்யப்படவில்லை. பணத்தைக் கைப்பற்றியுள்ள போலீசார், அவரது குடும்பத்தினர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர், "அவரது போட்டோவை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

model image
model imagefreepik

போட்டோவை பல வாட்ஸ்அப் குழுக்களில் அனுப்பி இருக்கிறோம். இதுவரை அவர் யார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. அவர் பசியால் இறந்ததாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரிடம் ஒரு லட்சம் இருந்துள்ளது. இதனால் இது குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

இதையும் படிக்க; பாஜக எம்.பிக்கள் 10 பேர் ராஜினாமா! பின்னணி என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com