மக்களவையில் பேச லஞ்சம்: மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவிநீக்கம்!

மக்களவையில் பேச லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ராபுதிய தலைமுறை

மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் தொடர்பான, அறிக்கை தாக்கல்

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 5வது நாளான இன்று (டிச.8) அவை கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் தொடர்பான, மக்களவை நெறிமுறைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், அதுதொடர்பாக எழுந்த அமளியால், சபாநாயகர் அவையை 12 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர் 12 மணிக்கு மீண்டும் மக்களவை கூடியது. அப்போது பாஜக எம்.பி. விஜய் சோன்கர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கும் அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார்.

அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர்

இந்த தீர்மானத்தை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து, திரிணாமுல் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அந்த அறிக்கையின் பிரதியைக் கேட்டு அமளியில் ஈடுபட்டனர். “மொய்த்ராவை அவையில் இருந்து வெளியேற்றப் பரிந்துரைக்கும் அறிக்கையின்மீது வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பு விவாதம் நடத்தப்பட வேண்டும்” என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கோரிக்கை வைத்தார். தொடர்ந்து இதுகுறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது சபாநாயகராக இருந்த பாஜக எம்பி ராஜேந்திர அகர்வால், "தற்போது அறிக்கை தாக்கல் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. அதன் மீது அவை முடிவெடுக்கும்” என்றார்.

மஹுவா மொய்த்ரா
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம்: பெண் எம்.பியின் வழக்கறிஞர் திடீர் விலகல்... பின்னணி என்ன?
மஹுவா மொய்த்ரா
மக்களவையில் பேச லஞ்சம் பெற்றதாக புகார்: தகுதி நீக்கம் ஆகிறரா திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா?

மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிப்பு

பின்னர் 2 மணிக்கு அவை தொடங்கியபிறகு, மஹுவா தொடர்பான தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்குப் பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம், நிறைவேறியதை அடுத்து, மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி பறிக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். தீர்மானத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செயதனர். இந்த விவகாரத்தில், குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்த நாளில் இருந்தே மஹுவா மொய்த்ரா அதை தொடர்ந்து மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா, “முழுமையான விசாரணை நடத்தப்படாமல் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதானி என்ற ஒருவருக்காக ஒட்டுமொத்த அரசும், இயங்கி வருகிறது. அதானி மீது மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக, அதானியைக் காப்பாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. பெண்கள், சிறுபான்மையினர் அனைவரின் உரிமையை மத்திய அரசு பறிக்கிறது. 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவில் இஸ்லாமிய உறுப்பினர் ஒருவர்கூட இல்லை. தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வரும் பாஜக அரசின் முடிவுகாலம் நெருங்கிவிட்டது” என கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார்.

மஹுவா மொய்த்ரா
மக்களவையில் பேச பணம்?: மவுனம் கலைத்த மம்தா பானர்ஜி.. மஹுவா மொய்த்ராவுக்கு திடீர் ஆதரவு!

மஹுவா மொய்த்ரா விவகாரம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது. “மஹுவா மொய்த்ரா தரப்பின் விளக்கத்தைக் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதனிடையே கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மஹுவா மொய்த்ரா, "துர்கா மாதா வந்துவிட்டாள்; இனி, நாம் பார்க்கலாம். ஒரு மனிதன் மீது தீயசக்தி விழும்போது முதலில் அறிவு அழிகிறது. அவர்கள் ‘வஸ்த்ரஹரன்’ (துகிலுரித்தல்) ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது நீங்கள் மகாபாரதப் போரைக் காண்பீர்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ராவுக்கு புதிய பொறுப்பு.. ஆதரவுக்கரம் நீட்டிய திரிணாமுல்! மம்தாவின் திட்டம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com