25 நாட்களுக்கு பயமில்லை.. விலை உயரப்போகும் பெட்ரோல், டீசல்? தீவிரம் காட்டும் இந்தியா!
இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளின் தாக்குதலுக்கு மத்தியில், இந்தியாவில் தற்போது சுமார் 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இருப்பு இருப்பதாக அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிலும், ஈரானின் உச்சபட்ச தலைவர் அலி காமேனி மரணத்திற்கு ஈரானின் தாக்குதல் வேகம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் உலகளவில் எண்ணெய் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்தன. உலகின் மிக முக்கியமான எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்றான மத்திய கிழக்கிலிருந்து வரும் விநியோகம் பாதிக்கப்படக்கூடும் என்று வர்த்தகர்கள் கவலைப்படுகிறார்கள். மேலும், தாக்குதல் காரணமாக, எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கான கப்பல் செலவுகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு $79.44 ஆகவும், $1.70 அல்லது 2.2% அதிகமாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது. இது ஜனவரி 2025க்குப் பிறகு அதிகபட்சமாக $82.37 ஆகவும் உயர்ந்தது, பின்னர் குறைந்து 6.7% உயர்ந்து முடிவடைந்தது.
அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $1.17 அல்லது 1.6% உயர்ந்து $72.40 ஆக உயர்ந்தது.
தீவிரம் காட்டும் இந்தியா...
இதற்கிடையில், இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாகவும் நன்கு கண்காணிக்கப்படுவதாகவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்தியாவில் தற்போது சுமார் 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இருப்பு இருப்பதாக அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளராக உள்ளது. அந்த வகையில், நாடு போதுமான அளவு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் விமான டர்பைன் எரிபொருள் (ATF) போன்ற முக்கிய எரிபொருட்களை கையிருப்பில் வைத்திருக்கிறது. மேலும், இந்த நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா மீண்டும் ரஷ்யாவைத் தனது முக்கிய கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைச் சார்ந்து இல்லாத சுமார் 1 கோடி பேரல் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதுதவிர, அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து கூடுதல் எண்ணெய் பெறவும், மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரத்தில், உலகளாவிய சந்தைகளை பாதித்துள்ள பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் பெட்ரோல் அல்லது டீசல் விலையை உயர்த்த உடனடி திட்டம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். ஆனால் வரும் நாட்களில் நிலைமையைப் பொறுத்து நிறைய விஷயங்கள் மாறும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே உலகளாவிய புவிசார் அரசியல் அபாயங்களால், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் விலை உயர்ந்த நிலையில், அடுத்து கச்சா எண்ணெய், எரிபொருள் விலை உயரும் அபாயத்தில் இருப்பதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி என்பது என்ன?
தாக்குதல் காரணமாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான், தடையை மீறி இந்த வழியாக எந்த கப்பல் சென்றாலும் அதனை அழிப்போம் என எச்சரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியானது, பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. இதன் குறுகிய பகுதி சுமார் 33 கிலோமீட்டர் அகலம் மட்டுமே கொண்டது. இந்தப் பாதையின் வடக்குக் கரை முழுவதையும் ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. பாரசீக வளைகுடாவின் நுழைவாயிலில் அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, மத்திய கிழக்கின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை உலகச் சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய வழித்தடமாக உள்ளது. உலகின் தினசரி எண்ணெய் தேவையில் சுமார் 20 சதவீதம், அதாவது 20 மில்லியன் பீப்பாய்கள், இந்த வழித்தடத்தில்தான் கொண்டு செல்லப்படுகின்றன.
தற்போது இதை ஈரான் மூடியிருப்பதால், உலக எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரான் இந்தப் பாதையை மூடுவதாக அறிவித்தவுடன், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 5% க்கும் மேல் உயர்ந்து இருக்கிறது. தற்போது, இந்த முக்கிய வழித்தடத்தில் 700-க்கும் அதிகமான கப்பல்கள் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் போன்ற முக்கிய ஆசியச் சந்தைகள் ஹார்முஸ் வழியான எண்ணெய்யை அதிகம் சார்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

