திருப்பியடித்த ஈரான்.. அதிகரித்த கச்சா எண்ணெய் விலை.. LNG உற்பத்தியை நிறுத்திய கத்தார்!
மத்திய கிழக்கில் ஈரானின் தாக்குதல்களால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன. கத்தார் எனர்ஜி உற்பத்தியை நிறுத்தியதால் இயற்கை எரிவாயு விலை மேலும் உயர்ந்துள்ளது. ஹார்முஸ் நீர்வழி வழியாக கப்பல்கள் செல்ல வேண்டாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய கிழக்கு முழுவதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.
உலகின் மிகப்பெரிய LNG ஏற்றுமதியாளர்களில் ஒன்றான கத்தார் எனர்ஜி ஆலைகள் மீது நடந்த ராணுவ தாக்குதல்களை தொடர்ந்து கத்தார் எனர்ஜி உற்பத்தியை நிறுத்தியுள்ளது . இதனால் இயற்கை எரிவாயு விலை உயர்ந்துள்ளது.
வார இறுதியில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே குறைந்தது மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகளாவிய அளவுகோலான பிரெண்ட் (brent) கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $82 ஐ எட்டியதால், எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளது .
உலகளாவிய எரிசக்தி பாதையான ஹோர்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் செல்லக்கூடாது என ஈரானும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் சுமார் 20% அனுப்பப்படும் நாட்டின் தெற்கில் உள்ள முக்கியமான நீர்வழி வழியாக கப்பல்கள் செல்ல வேண்டாம் என்று ஈரான் எச்சரித்தது. இதன் காரணமாக கச்சா எண்ணெய்க் கப்பல்கள், எரிவாயு கப்பல்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றிச்செல்லும் நிலை ஏற்படும். விலை உயர்வு, கால தாமதம் உள்ளிட்டவற்றால் பல நாடுகளில் எரிபொருளுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திரவ இயற்கை எரிவாயு (LNG)உற்பத்தி நிறுத்தம்
திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் உலகின் மிகப்பெரிய நிறுவனமான கத்தார் எனர்ஜி, தனது உற்பத்தியை அதிரடியாக நிறுத்தியுள்ளது. ராஸ் லஃபான் (Ras Laffan) மற்றும் மெசைட் (Messaieed) பகுதிகளில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களால், முக்கிய ஆலைகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் சர்வதேச எரிசக்தி சந்தையில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக, ஐரோப்பிய சந்தையில் இயற்கை எரிவாயு விலை ஒரே நாளில் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு, இது பெரும் சவாலாக மாறியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் மோதல் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திங்கள் காலை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 12% அதிகரித்து 82.37 டாலராக இருந்தது. இது கடந்த 14 மாதங்களில் இல்லாத அதிக அளவாகும். ஈரான் உலகின் முக்கிய கடல் வழி பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
விலை மேலும் அதிகரித்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்படும். எனினும் கச்சா எண்ணெய் உற்பத்தியை படிப்படியாக அதிகரிக்க எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் முடிவெடுத்துள்ளது.
பெட்ரோல் நிலையங்களில் குவிந்த இலங்கை மக்கள்..
இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்தனர். குறிப்பாக முல்லைத்தீவு, கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

