கலால் வரியை 10% குறைத்த மத்திய அரசு.. பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையுமா?
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 13 கலால் வரியை ரூ. 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்ட நிலையில், முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் நாளையுடன் ஒரு மாதத்தைத் தொட இருக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக சமரசப் பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் அங்கு தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கிவைத்திருப்பதன் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்து, எதிரி நாட்டுக் கப்பல்களைத் தவிர மற்றக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கலாம் என ஈரான் அனுமதியளித்திருக்கிறது.
இதன்காரணமாக, இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் அவ்வழியாகச் செல்கின்றன. அதேநேரத்தில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இலங்கை மற்றும் பாகிஸ்தான் மூன்று மடங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ப்ரீமியம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. இதனிடையே, நயாரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 5-ம், டீசலுக்கு ரூ. 3-ம் உயர்த்துவதாக இன்று அறிவித்திருந்தது.
இந்தச் சூழலில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை ஏற்றத்தை தடுக்கும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வசூலிக்கப்பட்ட ரூ. 13 கலால் வரியை ரூ. 3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசலுக்கு ரூ.10 வசூலிக்கப்பட்ட நிலையில், முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கணக்கீட்டின்படி, இத்தகைய நடவடிக்கை எரிபொருள் விலைக் குறைப்புக்கு வழிவகுக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், இந்தியாவில் சில்லறை எரிபொருள் விலைகள் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை. அவற்றை இந்திய எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்கின்றன. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை, அந்நியச் செலாவணி விகிதம் மற்றும் தங்களின் சொந்த இலாப வரம்புகளைக் கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலைகளை நிர்ணயம் செய்கின்றன. அதன்படி, பார்க்கப்போனால், இந்த நிறுவனங்கள் மத்திய அரசின் வரி குறைப்பின் பலனை உடனடியாக நுகர்வோருக்கு வழங்காது என்றே தெரிகிறது. அதாவது, நிறுவனங்கள் உடனடியாக விலைகளைக் குறைப்பதற்குப் பதிலாக, முந்தைய நஷ்டங்களை ஈடுசெய்ய அல்லது லாப வரம்புகளை நிலைப்படுத்தவே வரி விலக்கைப் பயன்படுத்திக்கொள்ளும் என்றே கூறப்படுகிறது.
அதாவது, அரசாங்கம் தனது வரிப் பங்கைக் குறைத்திருந்தாலும், அதன் முழுப் பலனும் உடனடியாக நுகர்வோருக்குக் கிடைக்காமல் போகலாம். பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாகக் குறைக்காது என்றும், அதேவிலையிலேயே விற்பனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ப் பதற்றமும் இதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், கலால் வரி குறைப்பு என்பது நேரடி விலைக் குறைப்பாக இல்லாமல், ஒரு பாதுகாப்பு வளையமாகவே செயல்படுகிறது.
இது சில்லறை விலைகளைக் கட்டாயமாகக் குறைப்பதற்குப் பதிலாக, விலைகளை உடனடியாக உயர்த்தாமல் செலவுகளை நிர்வகிப்பதற்கான சில நெகிழ்வுத்தன்மையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்குகிறது. கடந்த ஒரு மாதத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 70 டாலரிலிருந்து கிட்டத்தட்ட 122 டாலராகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, உலகம் முழுவதும் எரிபொருள் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன; பல பிராந்தியங்களில் 30% முதல் 50% வரை விலை உயர்வு பதிவாகியுள்ளது. தற்போதைய உலகளாவிய விலைகளின்படி, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோலுக்கு லிட்டருக்கு சுமார் ரூ.24 மற்றும் டீசலுக்கு லிட்டருக்கு ரூ.30 என கணிசமான இழப்புகளையும் சந்தித்து வருகிறது.

