“அவைக்குள்ளேயே ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியவில்லை” - கடும் விமர்சனத்தில் நாடாளுமன்ற வாக்குப்பதிவு
ஒரே நாடு ஒரே தேர்தல்
“ஒரு நாடு, ஒரு தேர்தல்” திட்டத்திற்காக, மாநில சட்டசபைகளுக்கு மக்களவையுடன் தேர்தல் நடத்த ஒரு மசோதாவும், யூனியன் பிரதேச சட்டசபைகளுக்கு மக்களவையுடன் தேர்தல் நடத்த இன்னொரு மசோதாவும் என இரண்டு மசோதாக்களை, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இதற்கு காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக சார்பாக பேசிய டி ஆர் பாலு மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார். தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் பிரிவு எம்.பி. சுப்ரியா சூலே இதே கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனையை ஏற்றுக் கொள்ளாவிட்டால், மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்றார்.
அதே சமயத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சந்திரசேகர், மசோதாவை ஆதரிப்பதாக பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா, லோக் ஜன் சக்தி கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட மசோதா
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஏற்பது குறித்து குரல் வாக்கெடுப்பு நடத்துவது போதாது எனவும், பிரிவு வாரியாக வாக்கெடுப்பு தேவை எனவும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இந்நிலையில் மக்களவையில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலமாக வாக்குப்பதிவு நடத்த சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். பல உறுப்பினர்களின் இருக்கையில் பொருத்தப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என புகார் வந்ததால், சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்யலாம் என சபாநாயகர் அனுமதி அளித்தார். இப்படி மக்களவையில் வாக்குப்பதிவு நடைபெற்ற பிறகு, மசோதாக்களை தாக்கல் செய்ய ஆதரவாக 269 வாக்குகள் பதிவாகியுள்ளன என சபாநாயகர் அறிவித்தார். மசோதாக்களை தாக்கல் செய்யக்கூடாது எனவும் "ஒரு நாடு, ஒரு தேர்தல்" திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என 198 வாக்குகள் பதிவாயின.
எதிர்ப்பு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், மசோதாக்களை நாடாளுமன்ற குழு பரிசீலனைக்கு அனுப்பலாம் என்ற பிரதமரின் கருத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். நாடாளுமன்ற குழு பரிசீலனைக்கு மசோதாக்களை அனுப்பலாம் என முறையாக சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அறிவித்ததை தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா மக்களவையை ஒத்தி வைத்தார். விரைவிலேயே "ஒரு நாடு, ஒரு தேர்தல்" மசோதாக்களை பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையே முன்மாதிரி
வாக்கெடுப்பின் போது, சில எம்பிக்களின் இருக்கைகளில் பொருத்தப்பட்டிருந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் செய்யாததை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. இதுதொடர்பாக, மதுரை மக்களவைத் தொகுதியில் உறுப்பினரான சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஒரே தேர்தல்… மக்களவையே முன்மாதிரி! மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது பாதி பேரின் இருக்கையில் தான் மின்னனு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதி பேர் வாக்குச்சீட்டு முறையில் வாக்களித்தனர். ஒரு அவைக்குள் ஒரே மாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே மாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டதிருத்தம் கொண்டுவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.