Opinion | ‘நியாயமற்ற’ காலத்தில் ‘நியாயம்’ கிட்டுமா? | ஆளுநர்களின் அதிகாரம் குறித்து...
“ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சட்டமன்றம், ஓர் ஆளுநர், இரண்டு அவைகள் அல்லது ஒரேயொரு அவை இருக்க வேண்டும்” என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 168-வது பிரிவு, மேற்படி வாசகங்களுடன் தொடங்குகிறது. மாநில சட்டமன்றங்களில் ‘ஆளுநர்’ இடம்பெறுவது தேவைக்கும் அதிகமானது என்றே எப்போதும் கருதி வந்திருக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றங்களில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அதிகாரி ஏன் இடம்பெற வேண்டும்? சட்டப்பேரவை அல்லது இரு அவைகள் ஆகியவற்றில் உரை நிகழ்த்துவது மற்றும் இதர சம்பிரதாயமான கடமைகளை ஆளுநர் இல்லாமலே (அரசமைப்புச் சட்டம் 202 முதல் 207 வரையில் இடம் பெறுபவை) நிகழ்த்திவிட முடியும் – இங்கிலாந்து அரசர் (பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு) வராமலேயே செய்வதைப் போல.
மாநிலங்களின் சட்டம் இயற்றும் கடமைகளில் ஆளுநர்களின் உண்மையான பங்களிப்பு, அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதுதான். ஒரு மசோதா – சட்டமாவதற்கு முன்னால் சட்டமன்ற நடவடிக்கைகளிலேயே முக்கியமான பொறுப்பு இது மட்டுமே. அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளை மாநில சட்டமன்றங்கள் மீறிவிடாமலிருக்கவே, மசோதாக்களைப் பரிசீலித்து அதற்கு அனுமதி தருவது அல்லது அனுமதி மறுப்பது ஆகிய அதிகாரங்களை ஒருவருக்கு வழங்குவது அவசியம்.
ஆராய – தடுக்க அல்ல...
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200 கூறுகிறது: “மாநில சட்டமன்றங்களில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அது ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும். ஆளுநர் அதைப் பரிசீலித்த பிறகு அதற்கு தன்னுடைய ஒப்புதலைத் தரலாம் அல்லது அனுமதி தராமல் அதை நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம்”.
அரசமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவு இன்னொன்றையும் கூறுகிறது: மசோதாவில் இடம் பெற்றுள்ள ஏதேனும் ஒரு பகுதி அல்லது பகுதிகள் குறித்து சட்டப்பேரவை மீண்டும் ஒரு முறை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற குறிப்போடு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் திருப்பி அனுப்பலாம். இந்த ஏற்பாடு சட்டமன்றங்களின் செயல்களை நல்ல நோக்கத்தோடு ஆரோக்கியமாகக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதே தவிர, சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு அவற்றைத் தடுத்து நிறுத்தி சேதம் விளைவிக்க உரிமை தரும் நோக்கில் செய்யப்பட்டதல்ல.
ஆளுநர்கள் – குறிப்பாக பாரதிய ஜனதா அல்லாத பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பதவி வகிப்பவர்கள் - அரசமைப்புச் சட்டம் பிரிவு 200 தரும் இந்த அதிகாரத்தை, மாநில அரசுகளின் செயல்களைக் குலைக்கும் வகையிலேயே பெரும்பாலும் செயல்படுத்துகின்றனர். மசோதாக்களைப் பரிசீலிக்க அளிக்கப்பட்ட அதிகாரம், அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்காகவே தரப்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர். எனவே, தங்களுக்கென்று ‘தனி ரத்து அதிகாரத்தை’ (பாக்கெட் வீட்டோ) இந்தப் பிரிவின் மூலம் பயன்படுத்த கற்றுக்கொண்டுள்ளனர். இந்த ரத்து அதிகாரமானது, மசோதா தொடர்பாக மேற்கொண்டு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அதை அப்படியே கிடப்பில் போடுவதாகும். அதற்கு அனுமதியும் வழங்குவதில்லை, அனுமதியும் மறுப்பதில்லை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கும் அனுப்புவதில்லை. இது கலப்படமற்ற - தீமையான ஆயுதமாகும். ‘சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதா’ என்ற மக்களுடைய விருப்பத்தை, நிறைவேற்ற முடியாமல் தடுக்கும் சீர்குலைவுச் செயலாகும். இப்படி தங்கள் அளவில் ரத்து அதிகாரத்தைச் செயல்படுத்த அரசமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு இடம் தரவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக முதலில் விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு தெளிவானது: ஆளுநரின் கையொப்பத்துக்கு ஒரு மசோதா அளிக்கப்பட்டவுடன் அதற்கு அவர் ஒப்புதல் தரலாம், அல்லது ஒப்புதல் தர மறுத்து சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு ‘விரைவில்’ மீண்டும் அனுப்பி வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிவிடலாம். இவற்றில் எதுவுமே அல்லாத - தனி ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்த - சட்டத்தில் இடமில்லை என்று இரு நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். இதே வழக்கைப் பிறகு விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வும் இந்த முடிவுகளுடன் பெருமளவு ஒத்துப் போனது. இரு அமர்வுகளுக்கு இடையிலும் சில அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவை பொதுமக்கள் கவலைப்படும்படியான அளவுக்குப் பெரிதல்ல. இந்தக் கருத்துகள் சரியா என்ற முடிவை சட்ட நிபுணர்கள் ஆராய்ந்து கூறட்டும் என்று இப்போதைக்கு விட்டுவிடுவோம்.
பொதுமக்களின் கவலை
சட்டமன்றம் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு வேண்டுமா – வேண்டாமா என்பதில் இரு அமர்வுகளுக்கும் நிலவும் கருத்து வேறுபாடுகள்தான் இப்போது பொதுமக்களுக்குப் பெருங்கவலையாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் அமர்வு நிர்ணயித்தது; ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அந்த அம்சத்தில் சற்றே தயங்கியது – அந்த முடிவுக்கு எதிராக தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் வாசகங்கள், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வெளிப்படையாக காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என்று ஐந்து நீதிபதிகள் அமர்விடம் வலியுறுத்தி கூறப்பட்டது.
சட்டமியற்றும்போது எழும் நடைமுறைகளைச் சமப்படுத்தவும், அரசமைப்புச் சட்டப்படி அதிகாரம் பெற்றவர்கள் தங்களுடைய செயல்களைச் செய்வதற்கு இளக்கமான சூழலை வழங்க வேண்டும் என்பதற்காகவும், பலதரப்பட்ட பின்னணிகள் – சூழல்களுக்கு ஏற்பச் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் ஐந்து நீதிபதிகள் அமர்வு காலக்கெடு விதிக்கப்படுவதை அனுமதிக்கவில்லை. ஆனால் இந்தக் கொள்கைகள் கோட்பாட்டு ரீதியிலும் அரசமைப்புச் சட்டப்படியும் ‘விதிவிலக்காக’ இருக்க அனுமதிக்கப்பட முடியாதவை.
அம்பேத்கர் எச்சரிக்கை
உச்ச நீதிமன்றமானது டாக்டர் அம்பேத்கரின் எச்சரிக்கையை, இந்தத் தீர்ப்புக்கு முன்னதாக சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்காக உருவாக்கிய சட்டப் பேரவையின் இறுதி கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், ‘மனித மனங்கள் அல்லது எண்ணங்கள் - தவறாகவும் போகக்கூடிய’ பலவீனமான தருணங்களைச் சுட்டிக்காட்டினார்:
“அரசமைப்புச் சட்டத்தை எவ்வளவுதான் ‘நல்லதாக’ இயற்றினாலும், அதை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் ‘தவறான நடத்தையுள்ளவர்களாக’ இருந்தால், சட்டமும் தவறாகவே பயன்படுத்தப்படும்; சட்டம் எவ்வளவு ‘தவறாக நிறைவேற்றப்பட்டாலும்’ அதை அமல் செய்கிறவர்கள் ‘நல்லவர்களாக’ இருந்துவிட்டால், மக்களுக்கு நன்மையே ஏற்படும்”.
மாநில ஆளுநர்களாக இப்போது பதவி வகிப்பவர்களில் கணிசமானவர்கள் – ‘நல்லவர்களாக இல்லை’ என்றே அஞ்சுகிறேன். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் எதைச் செய்கிறார்கள் – எதைச் செய்யாமல் இருக்கிறார்கள் என்பது இந்திய மக்களால் பார்க்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் இயற்றும் மசோதாக்களை மாதக் கணக்கில் அல்ல – ஆண்டுக் கணக்கில் தடுத்துக் கொண்டிருந்தால் அரசமைப்புச் சட்டப்படி நிர்வாகம் நடக்காது, மாறாக அது சீர்குலையும். மக்களுடைய விருப்பங்கள் நிறைவேறாமல் முறியடிக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் (ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்றவை) ஆளுநர்களின் செயல்கள் சட்டமன்றம் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சமநிலையைப் பேணுவதற்குப் பதில் அதற்கு எதிராகத் திருப்பிய உதாரணங்கள் பல, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளாக உள்ளன. இந்த சமநிலையை மீட்க வலுவான தீர்ப்புதான் ஐந்து நீதிபதிகள் அமர்விடம் எதிர்பார்க்கப்பட்டது. அந்த அமர்வும் மிக நன்றாகவே வழக்கை ஆராய்ந்தது, ஆனால் உண்மை நிலைக்கு வெகு தொலைவில் உள்ளதான – சட்ட வாசகம் தரும் நிலைக்கு முக்கியத்துவம் அளித்து – தனது கருத்தைத் தெரிவித்தது.
சட்டமும் உண்மை நிலையும்
‘உண்மை நிலைக்கு’ ஏற்றதாக சட்டம் அமைய வேண்டும். நீதித்துறையின் சுதந்திரத் தன்மையில் ‘சமரசம் செய்துகொண்டுவிடும்’ நிலைமை ஏற்படலாம் என்ற சிந்தனை காரணமாகவே, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்யவும் நியமனங்களுக்குப் பரிந்துரை செய்வதற்குமான அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் 217-வது பிரிவின் கீழ், உச்ச நீதிமன்றம் தன் வசமே எடுத்துககொண்டது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களால் சட்டமியற்ற முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சாரம், அதுதான் சட்டப்படியான ஆட்சிக்கும் அடையாளம். சட்டங்களை நியாயமற்ற வகையிலும் வேண்டுமென்றும் தடுத்து நிறுத்த அனுமதித்தால் நியாயமாக நடந்துகொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பதும்கூட வீண் முயற்சியாகவே முடியும்.
