அத்வானியைத் தவிர்க்கிறாரா பிரதமர் மோடி; இதுவரை நடந்த சம்பவங்கள் என்ன?

75 வயதைக் கடந்தவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் பதவி கிடையாது என்ற, பாஜகவின் புதிய நடைமுறையால் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப் பட்டனர். இந்தப் பட்டியலில் நம்பர் ஒன், அத்வானிதான். படிப்படியாக ஓரம்கட்டப்பட்டார் அத்வானி.
பிரதமர் மோடி - அத்வானி
பிரதமர் மோடி - அத்வானிpt web

பாஜகவின் சூத்திரதாரி அத்வானி

நாட்டின் பிரதமராக 3ஆவது முறையாக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடி, பாஜகவின் முன்னோடிகளான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோரிடம் நேரில் ஆசி பெறுகிறார். இது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், தேர்தல் நேரம் தவிர, பிற சமயங்களில், கட்சி முன்னோடிகளை அவர் நடத்தும் விதம் குறித்து, விமர்சனங்களும் கேள்விகளும் இல்லாமல் இல்லை.

துணை பிரதமராக, உள்துறை - தகவல் ஒலிபரப்புத் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக, பாஜகவின் தலைவராக, பதவி வகித்து ஜொலித்தவர் எல்.கே.அத்வானி. அரசியலில் சாதாரண மனிதர் அல்ல அத்வானி. பா.ஜ.க.வை உருவாக்கிய நிறுவனர் உறுப்பினர்; கட்சியைக் கட்டமைத்த சிற்பி. மக்களவையில் இரண்டே இடங்களை மட்டுமே கொண்டிருந்த பாஜகவின் கட்சியின் நிலையை, உச்சத்துக்கு கொண்டு சென்று, ஆட்சி பீடத்தில் அமர்த்திய சூத்திரதாரி.

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநில சட்டப்பேரவைகளில் பாஜகவை அரியணை ஏற்றியவர். குஜராத்தின் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில், 6 முறை (1991, 1998, 1999, 2004, 2009, 2014) களம் கண்டு வென்றவர். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி,1990 ல், குஜராத்திலிருந்து அயோத்தி வரை, அத்வானி நடத்திய ரத யாத்திரை, புதுவித அரசியலுக்கு வித்திட்டது. இந்த ரத யாத்திரை, பாஜக என்ற கட்சியை தென் மாநிலங்களுக்கும் கொண்டு சேர்த்தது.

பிரதமர் மோடி - அத்வானி
வெறும் 5 நாட்களில் ரூ.579 கோடி.. கிடுகிடுவென உயர்ந்த சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்துகள்!

மோடிக்கு அரசியல் மறுவாழ்வு அளித்தவர்

இந்த அத்வானிதான், இப்போது 3 ஆவது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி மீது, ஒளியைப் பாய்ச்சியவர். மோடியின் தொடக்க கால அரசியல் வாழ்க்கையில் வழிகாட்டியாக இருந்து, கட்சியிலும் பதவி வாங்கிக் கொடுத்தவர் அத்வானி. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தால், மோடியின் முதல்வர் பதவி பறிபோக இருந்ததைத் தடுத்து, அரணாகக் காத்தவர். அந்தத் தருணம், மோடிக்கு அரசியல் மறுவாழ்வு என்றே கூறலாம்.

2004 முதலான பத்தாண்டுகள் காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, 2014 ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், மீண்டும் ஆட்சிக்கு வந்தது பாஜக. மோடி முதல்முறையாக பிரதமராக பதவியேற்க, எம்.பி.யாக பங்களித்தார் அத்வானி. அப்போது, பாஜக அலுவலகத்திலும் பதவியேற்பு விழாவிலும் அத்வானியின் காலில் விழுந்து வணங்கியவர்தான் மோடி.

பிரதமர் மோடி - அத்வானி
’தெலுங்கு தேச கட்சியினரால் மாநிலத்தில் வன்முறை..’ குற்றச்சாட்டை வைத்த ஜெகன் மோகன்!

அத்வானியை தவிர்த்த மோடி

ஆனால், மோடி பிரதமர் ஆன பிறகு, பாஜக முன்னோடி அத்வானியை தவிர்ப்பதாகவே பார்க்கப்பட்டது. அவருக்கு அமைச்சரவையில் இடமின்றி போனது. எம்.பி.கள் மீதான நன்னடத்தை புகார்களை விசாரிக்கும் மக்களவை நெறிகள் குழுவின் தலைவர் என்ற முக்கியத்துவமில்லாப் பதவியே கிடைத்தது. மோடியின் கடைக்கண் பார்வை கூட கிடைக்கவில்லை அத்வானிக்கு. அதே நேரத்தில், 2015 ஆம் ஆண்டில் பத்மவிபூஷன் விருது கொடுத்தது மோடி தலைமையிலான மத்திய அரசு.

2018 மார்ச் மாதம், திரிபுராவில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. முதலமைச்சராக பிப்லப் தேவ் பதவியேற்கும் விழா மேடையில், தன்னை வணங்கி வரவேற்ற மூத்தவர் அத்வானியை, கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார் மோடி. இதனால், அத்வானி கையைப் பிசைந்து கொண்டே, தர்மசங்கடத்துடன் நின்றதும் நிகழ்ந்தது. இந்தக் காட்சிகள் வைரலாகின. ஒரு அரசியல் சகாப்தத்தை அவமதிப்பதா, என சமூக வலைத்தளங்களில் கேள்விக்கணைகள் சீறின.

பிரதமர் மோடி - அத்வானி
”Ranji-IPL கோப்பை வென்று பதிலடி தர விரும்பினேன்..” - ஒப்பந்த நீக்கம் குறித்து BCCI-ஐ சாடிய ஸ்ரேயாஸ்!

தொடரும் விமர்சனங்கள்

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட அத்வானிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவரது தொகுதியான காந்தி நகர், அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சை வெடித்தது. இதற்குக் காரணம் மோடிதான் என்று பாஜகவினரே கொந்தளித்தனர். ஆனால், ஒரு கடிதம் எழுதி பாஜகவினரை சாந்தப்படுத்தி சர்ச்சைக்கு முடிவு கட்டினார் அத்வானி.

75 வயதைக் கடந்தவர்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் பதவி கிடையாது என்ற பாஜகவின் புதிய நடைமுறையால் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப் பட்டனர். இந்தப் பட்டியலில் நம்பர் ஒன், அத்வானிதான். படிப்படியாக ஓரம்கட்டப்பட்டார் அத்வானி.

எந்த ராமர் கோயிலைக் கட்டுவதற்காக ரத யாத்திரை நடத்தினாரோ, அந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை அத்வானி.

அயோத்தியில் நிலவிய கடும் குளிர்தான் காரணம் என்று காரணம் சொன்னார் அவர். அத்வானி ஓரங்கட்டப்படுவதாக எழும் சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, மோடி அரசால், பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் அத்வானி. விருதுகள் கொடுப்பது, பிறந்த நாள் மற்றும் தேர்தல் நேரங்களில் மட்டும், நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவது என, பொம்மையைப் போலவே அத்வானியை நடத்துகிறாரா மோடி என்ற விமர்சனங்கள், இன்னும் தொடரத்தான் செய்கின்றன.

பிரதமர் மோடி - அத்வானி
”Ranji-IPL கோப்பை வென்று பதிலடி தர விரும்பினேன்..” - ஒப்பந்த நீக்கம் குறித்து BCCI-ஐ சாடிய ஸ்ரேயாஸ்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com