அறிவியல் உலகம் எவ்வளவுதான் முன்னேறி எண்ணற்ற சாதனைகள் படைத்தாலும், அறியாமையால் மூடநம்பிக்கை எனும் இருளுக்குள் இன்னும் முடங்கிக்கிடப்பதுதான் வேதனையாக இருக்கிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில் உள்ளது, பந்த்வா கிராமம். இந்தக் கிராமத்தில் தம்பதி ஒருவருக்குப் பிறந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தைக்கு சுவாச நோய் இருந்துள்ளது.
இதைக் குணப்படுத்த வேண்டுமானால், குழந்தைக்கு இரும்புக் கம்பியால் சூடு வைத்தால் போதும் என்ற மூடநம்பிக்கையால், அந்த தம்பதியரும் குழந்தைக்கு சூடு வைத்துள்ளனர். இதில் அந்தக் குழந்தைக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த டிச. 21ஆம் தேதி அந்தக் குழந்தை அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.