ரஷ்ய போரில் கட்டாயப்படுத்தப்பட்ட கணவர்.. மீட்கக் கோரி அமைச்சருக்கு ஹைதராபாத் பெண் கடிதம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரை உடனே மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அஃப்ஷா பேகம். இவரது கணவர் முகமது அகமது. இவர், மும்பையை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளார். இந்த ஆலோசனை நிறுவனம் அடில் என்ற நபரால் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அவரது கூற்றுப்படி, அகமதுவுக்கு, சுமார் 30 பேருடன் சேர்ந்து, ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. இந்த நிலையில், அகமது ரஷ்யாவை அடைந்த பிறகு ஒரு தொலைதூரப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர்களுக்கு வலுக்கட்டாயமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டு 26 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவில் சுமார் 30 பேர் இந்தியர்கள் இருப்பதாகவும் அஃப்ஷா பேகம் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, தனது கணவரும் மற்றவர்களும் பின்னர் உக்ரைன் இராணுவத்திற்கு எதிராகப் போராட எல்லைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அஃப்ஷா பேகம் தெரிவித்துள்ளார். அப்போது, தனது கணவர் ராணுவ வாகனத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றதாகவும், அந்தச் சமயத்தில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், உக்ரைன் ராணுவத்துடன் சண்டையிடும்போது அவரது குழுவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சண்டையிடவோ அல்லது மரணத்தை எதிர்கொள்ளவோ அவர் அச்சுறுத்தப்படுவதாகவும் தன்னிடம் தெரிவித்துள்ளார். ஆகையால், ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், தனது கணவரைத் தொடர்புகொண்டு அவரை மீட்டு விரைவில் இந்தியா அனுப்புமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு அஃப்ஷா பேகம் கடிதம் எழுதியிருப்பதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், முகமது அகமது மட்டுமே தனது குடும்பத்தின் வருமானம் ஈட்டும் ஒரே நபராக இருப்பதாகவும் இக்குடும்பத்தில் அவரது வயதான தாயுடன் தானும் தனது இரண்டு குழந்தைகளும் வசித்துவருவதாகவும் பேகம் குறிப்பிட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் போரில் வடகொரியா மற்றும் இந்திய இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகக் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.