இந்தியாவில் எரிபொருள் விலை உயராது.. அச்சம் வேண்டாம்.. காரணம் இதுதான்!
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் போரின் விளைவால், இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நிலை உருவாகியுள்ளது. அதனால், உள்நாட்டு சந்தைகளில் எரிபொருள் விலை உயராது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டாலும், இந்தியாவுக்கு போதுமான கச்சா எண்ணெய் இருப்புகள் உள்ளன.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் போருக்கு மத்தியில் எரிசக்தி விநியோகம் பாதிப்படைந்துள்ளதால் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கும் என்று அரசாங்க வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை காலை NDTV இடம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலையை நிலைப்படுத்துவதற்காக நடந்த தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், இதனால் உள்நாட்டு சந்தைகளில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயராது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது
ஈரானின் தெஹ்ரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு தடை விதிக்கபட்டிருப்பதால் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால், அரசாங்கத்திடம் போதுமான கசசா எண்ணெய் இருப்புக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல முயற்சிக்கும் கப்பல்கள் 'தீவைக்கப்படும்' என்று எச்சரித்த பிறகு ஈரான் ஜலசந்தியை மூடியது. இதனால் ஹார்முஸ் வழியாக கடல் போக்குவரத்து மெதுவாக ஊர்ந்து செல்கிறது. உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கும், இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் பாதிக்கும் மேலானதும் ஹார்முஸ் ஜலசந்தி வழியை பயன்படுத்துகிறது.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா ஒப்புதல்
பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட இந்தியா-அமெரிக்க ஒப்பந்தத்தில் மாஸ்கோவிலிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலைக் குறைக்க வேண்டும் என்று வாஷிங்டன் ஒரு முக்கிய நிபந்தனை விதித்திருந்தது. தற்போது போர் காரணமாக இந்தியா ரஷ்யாவிடமிருவது கச்சா எண்ணெய் வாங்கினால், அமெரிக்கா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்ற கேள்வி இருந்தது.
இது குறித்து பேசிய அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஏப்ரல் 3ஆம் தேதி வரை இந்தியா 30 நாள்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி மூடபட்டது மட்டுமல்லாமல் , சவுதி அரேபியாவில் உள்ள பெரிய ராஸ் தனுரா சுத்திகரிப்பு நிலையம் உட்பட முக்கிய எண்ணெய் வயல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், மேற்கு ஆசியா முழுவதும் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் ருமைலா எண்ணெய் வயலும் தாக்கப்பட்டது.

