2-ஆம் உலகப்போருக்கு பின்.. மீண்டும் அமெரிக்கா கையிலெடுத்த ஆயுதம்! சுக்குநூறான ஈரான் போர்க்கப்பல்!
அமெரிக்கா, ஈரானிய போர்க்கப்பலை இலங்கை கடற்பரப்பில் மூழ்கடித்தது. இது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதல் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தவரும் நிலையில், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.
இது உலக நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் தற்போது அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய பிறகு மீண்டும் நீர்வழித்தாக்குதலை நடத்தியதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
2ஆம் உலகப்போருக்கு பின் தாக்குதல்..
இரண்டாம் உலகப்போருக்கு பிறகுமுதல் முறையாக அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலின் மூலம் ஈரானிய போர்க்கப்பல் நடுக்கடலில் வீழ்த்தப்பட்டுள்ளது. இலங்கையின் கல்லே(GALLE) கடற்பரப்பில் இருந்து சுமார் 40 கடல்மைல் தொலைவில் இருந்து அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானிய போர்க்கப்பலில் மொத்தம் 180 பேர் இருந்தநிலையில், 87 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும், 30க்கும் மேற்பட்ட மாலுமிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவிலிருந்து திரும்பிய போது துயரம்..
இந்திய கடற்படையின் மூலம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலன் 2026' கடற்படை பயிற்சியில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் போர்க்கப்பலை, இலங்கையின் தெற்குக்கடற்கரை அருகே அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல் டார்பிடோ ஏவுகணை மூலம் மூழ்கடித்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்கா நடத்தியமுதல் நீர்மூழ்கித் தாக்குதல் இது என அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் பீட்ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் நினைத்திருந்தபோது இந்த தாக்குதலை நடத்தி மூழ்கடித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் அழைப்பின்பேரில் வந்த ஒரு கப்பல், இந்தியாவிற்கு அருகிலேயே மூழ்கடிக்கப்பட்டது சர்வதேச அளவில் விவாதங்களை எழுப்பியுள்ளது.

