இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார். முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், 2018-ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த 16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியுடன் ஐபிஎல்லிருந்தும் ஓய்வுபெற்றார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு, வாழ்க்கையில் அடுத்த அத்தியாயமாக அரசியலில் கால்பதிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி அம்பத்தி ராயுடு, ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இதனையடுத்து அம்பத்தி ராயுடு, தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் விலகுவதாக இன்று (ஜன.6) அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன். அடுத்தகட்ட நடவடிக்கைகள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்" என அதில் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திலேயே, அதுவும் ஆளும் அரசியலில் இருந்து அம்பத்தி ராயுடு ஓய்வு அறிவித்திருப்பது திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.