”இனி பிணத்தை வைத்து போராட்டம் செய்தால்..” - பாஜக அரசு எடுத்த முடிவு!
இறந்த உடல்களுக்கு மரியாதை செலுத்தும் சட்டத்தை ராஜஸ்தான் அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், ராஜஸ்தானில் சடலங்களுடன் போராட்டம் நடத்தினாலோ அல்லது தகனம் செய்வதில் தாமதம் செய்தாலோ 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ராஜஸ்தானில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக பஜன் லால் சர்மா உள்ளார். இந்த நிலையில், இறந்த உடல்களுக்கு மரியாதை செலுத்தும் சட்டத்தை ராஜஸ்தான் அரசு அமல்படுத்தியுள்ளது. அதாவது, ராஜஸ்தானில் சடலங்களுடன் போராட்டம் நடத்தினாலோ அல்லது தகனம் செய்வதில் தாமதம் செய்தாலோ 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனும் சட்டத்தை அவ்வரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.
இச்சட்டம் முதன்முதலில் அம்மாநில சட்டமன்றத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியால் 2023இல் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், பாஜக அரசாங்கம் அதைல் எந்த திருத்தங்களும் செய்யாமல் அதை அமல்படுத்தியுள்ளது. இறந்த உடலைப் பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்துவது, சடலத்தை அரசியலாக்குவது மற்றும் இறுதிச் சடங்கை 24 மணி நேரத்திற்கும் மேலாக தாமதப்படுத்துவது போன்ற விஷயங்களை கிரிமினல் குற்றங்களாகக் கருதுகிறது.
புதிய விதிகளின்படி, இறந்தவரின் இறுதிச் சடங்குகள் பாதிக்கப்பட்டவர் இறந்த 24 மணி நேரத்திற்குள் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் வெளிமாநிலங்களில் இருந்தால் அல்லது உடலின் பிரேதப் பரிசோதனை நடத்த வேண்டியிருந்தால் மட்டுமே இறுதிச் சடங்கை தாமதப்படுத்த சிறப்பு அனுமதிகள் வழங்கப்படும். மேலும், இறந்தவரின் உடலைப் பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்துவது, சாலைகளை மறிப்பது மற்றும் அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது உள்ளிட்டவற்றுக்கு இச்சட்டம் தடை விதிக்கிறது. மீறிச் செய்வோர் மீது ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அச்சட்டம் தெரிவிக்கிறது.
அரசியல் அல்லது சமூக அழுத்தம் காரணமாக இறந்தவரின் உடலை குடும்பத்தினர் உரிமை கோரவில்லை என்றால், அதற்கும் தண்டனை விதிக்கப்படும் என்றும் புதிய சட்டம் பரிந்துரைக்கிறது. மேலும், இறந்த உடலுடன் போராட்டம் நடத்தும் குடும்ப உறுப்பினர்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இதே சட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது பாஜக விமர்சித்தது. தற்போது அதில் சிறிதும் மாற்றமின்றி அப்படியே அமல்படுத்தியுள்ளது.

