இந்திய மக்கள் தொகை
இந்திய மக்கள் தொகைpt desk

கருவுறுதல் விகிதம்: கடைசி இடத்தில் தமிழ்நாடு.. சமூகம் மற்றும் அரசியலில் ஏற்படும் தாக்கங்கள் என்ன?

இந்தியாவிலேயே குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ள நிலையில், அதிக கருவுறும் விகிதத்தைக் கொண்ட மாநிலமாக பிகார் உள்ளது.
Published on
Summary

தமிழ்நாட்டில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.3 ஆகக் குறைந்துள்ள நிலையில், பிகாரில் மொத்த கருவுறுதல் விகிதம் நாட்டிலேயே அதிகபட்சமாக 2.8 ஆக உள்ளது. இந்திய சமூகத்திலும் அரசியலிலும் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையத்தால் நிறுவப்பட்ட மாதிரிப் பதிவு அமைப்பின் தரவுகளின்படி, பெரிய மாநிலங்களில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை 1.3 என்ற மிகக் குறைவான கருவுறுதல் விகிதத்தைப் பெற்றுள்ளன. ஒன்றியப் பிரதேசமான டெல்லி மட்டுமே குறைவாக 1.2 என்ற தமிழ்நாட்டைவிட குறைவான கருவுறுதல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்திய மக்கள், கோப்புப்படம்
இந்திய மக்கள், கோப்புப்படம்pt desk

கருவுறுதல் விகிதம் என்பது ஒரு பெண் தனது வாழ்நாளில் சராசரியாகப் பெறும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.. நாட்டின் மக்கள்தொகை நிலைத்தன்மையை அடைவதற்கான மாற்று விகிதம் 2.1 ஆகும். ஆனால் இந்தியாவின் சராசரி கருவுறுதல் விகிதம் 1.9 ஆகக் குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், இந்தியாவில் வருங்காலத்தில் பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்தைவிடக் குறைந்து அதன் தொடர்ச்சியாக மக்கள்தொகை குறையத் தொடங்கும்.

இந்திய மக்கள் தொகை
மேற்கு வங்கம்|1200 டன் ஹில்சா மீன்கள்... நவராத்திரிக்காக வங்கதேசத்தின் பரிசு!

தென்மாநிலங்களில் கருவுறும் விகிதம் குறைவு !

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தென்மாநிலங்கள் அனைத்தும் குறைவான கருவுறுதல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ஆகிய நான்கு மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் 1.5ஆக உள்ளது. ஆனால் வட மாநிலங்கள் மாற்று விகிதத்தைவிட அதிகமான கருவுறுதல் விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. பிகார் மாநிலத்தின் மொத்த கருவுறுதல் விகிதம், நாட்டிலேயே அதிகபட்சமாக 2.8 ஆக உள்ளது. உத்தர பிரதேசத்தில் 2.6 ஆகவும் மத்திய பிரதேசத்தில் 2.4, சத்தீஸ்கரில் 2.2ஆகவும் கருவுறுதல் விகிதம் உள்ளது.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கோப்புப்படம்
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, கோப்புப்படம்pt desk

தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள், நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒரே அளவிலான கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளன. ஆனால் வட மாநிலங்களில் நகர்ப்புற, கிராமப்புறங்களிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. உதாரணமாக மத்திய பிரதேசத்தில் நகர்ப்புறங்களில் 1.8ஆக உள்ள கருவுறுதல் விகிதம் கிராமப்புறங்களில் 2.6ஆக உள்ளது. பிகாரில் நகர்ப்புறங்களில் 2.2ஆகவும் கிராமப்புறங்களில் 2.9 ஆகவும் உள்ளது. இந்தத் தரவு, தென்னிந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் பரவியுள்ளதைக் காட்டுகிறது.

இந்திய மக்கள் தொகை
தவெக|வெளியான விஜயின் சுற்றுப்பயண விபரம்... காவல்துறை அனுமதி மறுப்பது ஏன்? தவெக குற்றச்சாட்டு..

மத்திய அரசின் உந்துதலின் பெயரில் 1970கள் முதல், மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகள், பெண் கல்வியில் முன்னேற்றம், நகர்மயமாதல் ஆகியவற்றின் பயனால் இந்தியாவின் ஒட்டுமொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக தென் மாநிலங்கள் கூடுதல் முனைப்புடன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன. வட மாநிலங்கள் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதை சமீபத்திய தரவுகள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

இந்திய மக்கள், கோப்புப்படம்
இந்திய மக்கள், கோப்புப்படம்pt desk

இந்தநிலையில், மக்கள்தொகையைக் குறைத்திருக்கும் தென் மாநிலங்கள் மத்திய அரசு பின்பற்றும் கொள்கைகளால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு, நிதி ஒதுக்குதல் போன்றவை மக்கள்தொகை அடிப்படையிலேயே நடைபெறும் என்பதால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும், மத்திய அரசு நிதி ஒதுக்கீடும் குறையும் என தென் மாநில முதல்வர்கள் தெரிவித்துவரும் அச்சம் புறக்கணிக்கத்தக்கதல்ல.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை சிரமேற்கொண்டு செயல்படுத்திய தென்மாநிலங்கள், அதனால், எதிர்மறை பாதிப்புகளை எதிர்கொள்ளும் சூழலை தவிர்ப்பது மத்திய அரசின் கடமை என்று சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்திய மக்கள் தொகை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : 15-வது குடியரசு துணைத் தலைவராகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com