ATM மூலம் பணம்.. 7.5 மடங்கு ஓய்வூதியம்.. விரைவில் வெளியாக இருக்கும் EPFO-இன் பலே அறிவிப்புகள்!
ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95)கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதையடுத்து, குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.1,000, ரூ.7,500 ஆக உயர்த்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி முடிவு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
விரைவில் ATM மூலம் பணம்!
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வுக்காலத்திற்காக EPFO என்னும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி பிடித்தம் செய்யப்படும். அதேபோல நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்குவர். இதற்கு வட்டியும் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், EPFO அமைப்பை வங்கி செயல்முறையைpபோல் மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வங்கி செயல்பாடுகள் ஆன்லைனில் எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதேபோல, எதிர்காலத்தில் EPFO தொடர்பான அனைத்துப் பணிகளும் ஆன்லைனில் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது EPF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது என்பது ஒரு நீண்ட செயல்முறையைக் கொண்டது. EPFO பயனர்கள் தற்போது பணத்தை எடுக்க வேண்டும் எனில், முன்கூட்டியே ஆன்லைனில் விண்ணப்பம் செய்து காத்திருந்தால் அவர்களது வங்கிக் கணக்கிற்கு பணம் வரும்.
இத்தகைய சூழலில், EPFO 3.0 என்ற புதிய திட்டத்தின் மூலம் PF கணக்கில் இருக்கும் பணத்தை ATM மூலம் எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன்மூலம் பணத்தை அணுகுவது விரைவாகவும் எளிமையாகவும் மாறும். தவிர, ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS-95)கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை கணிசமாக உயர்த்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்
தற்போது ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (EPS-05) வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தொகையான 1,000 ரூபாயால், அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, குறைந்தபட்ச தொகையை ரூ. 7,500-ஆக உயர்த்த வேண்டும் என தொழிலாளர் சங்கங்களும் ஓய்வூதியதாரர் சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த உயர்வுக்கான கோரிக்கையும் தொடர்ந்து வலுத்து வருகிறது. இந்த நிலையில், ஓய்வூதியத் தொகையை உயர்த்த நாடாளுமன்றக் குழுவும் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.1,000, ரூ.7,500 ஆக உயர்த்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி முடிவு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
8.31 கோடி கோரிக்கைகள் நிறைவேற்றம்
மேலும், இந்த ஓய்வூதிய மாற்றங்களுடன், நிதியாண்டு 2026இல் கணக்குதாரர்களின் வைப்புநிதியில் 8.25 சதவிகிதம் வட்டி வரவை வழங்கவும் வாய்ப்புள்ளது. இந்த முன்மொழிவு, நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், கணக்குதாரர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்படும். இது அனைவருக்கும் நல்ல செய்தியாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக, கோரிக்கை தீர்வுகள் விஷயத்தில் EPFO சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. 2025–26ஆம் நிதியாண்டில், இது 8.31 கோடி கோரிக்கைகளைத் தீர்த்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது, முந்தைய ஆண்டில் இருந்த 6.01 கோடி கோரிக்கைகளைவிட கணிசமான உயர்வாகும். இவற்றில், 5.51 கோடி கோரிக்கைகள் முன்பணம் அல்லது பகுதித் தொகை திரும்பப் பெறுதல் தொடர்பானவை ஆகும்.

