EPFO 3.0 புதிய திட்டம் | விரைவில் PF கணக்கில் இருந்து ATMல் பணம் எடுக்கலாம்! விவரம் இதோ..
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வுக்காலத்திற்காக EPFO என்னும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி பிடித்தம் செய்யப்படும். அதேபோல நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்குவர். இதற்கு வட்டியும் கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. \
இந்நிலையில், EPFO அமைப்பை வங்கி செயல்முறையை போல் மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வங்கி செயல்பாடுகள் ஆன்லைனில் எவ்வாறு நடத்தப்படுகிறதோ அதேபோல, எதிர்காலத்தில் EPFO தொடர்பான அனைத்துப் பணிகளும் ஆன்லைனில் செய்யப்படும். தற்போது EPF கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது என்பது ஒரு நீண்ட செயல்முறையை கொண்டது. EPFO பயனர்கள் தற்போது பணத்தை எடுக்க வேண்டும் எனில் முன்கூட்டியே ஆன்லைனில் விண்ணப்பம் செய்து காத்திருந்தால் அவர்களது வங்கி கணக்கிற்கு பணம் வரும்.
EPFO 3.0 என்ற புதிய திட்டத்தின் மூலம் PF கணக்கில் இருக்கும் பணத்தை ATM மூலம் எடுத்துக்கொள்ளும் திட்டத்தை 2025ஆம் ஆண்டு பாதிக்குள் அமலுக்கு கொண்டுவர இருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறையின் செயலாளர் சுமிதா தாவ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.
இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதனால் பணத்தை எடுப்பது எளிதாக இருக்கும். நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கென பிரத்தியேகமான ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. அதோடு இன்னொரு முக்கியமான மாற்றமும் வரப்போவதாக கூறப்படுகிறது.
தற்போது, தொழிலாளர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் மட்டுமே EPFO க்கு வழங்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில், உங்கள் வருவாயில் 12% அதிகமாக பங்களிக்க விரும்பினால் நீங்கள் அதிகரிக்கலாம். இது உங்கள் ஓய்வூதியத்தை மேலும் அதிகரிக்கும். அதே நேரத்தில் நிறுவங்களின் பங்களிப்பு நிலையானதாக இருக்கும்.