UPI & ATM மூலம் PF பணம்.. ரூ.5 லட்சமாக உயரும் வரம்பு விரைவில் வரப்போகும் EPFO 3.0
PF கணக்கு வைத்திருப்பவர்கள் UPI மற்றும் ATM-கள் மூலம் உடனடியாகப் பணம் எடுக்கும் வசதியை அரசு அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் பணம் எடுக்கும் செயல்முறை மற்றும் வரம்புகள் என்னவென்று பார்க்கலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனது EPFO 3.0 தளத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இதன்மூலம் பயனர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதிப் பணத்தை UPI செயலிகள் மற்றும் ஏடிஎம்கள் மூலமாக நேரடியாக எடுக்க அனுமதிக்கும். தொழிலாளர் அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களின்படி, இந்த புதிய அமைப்பு அதன் இறுதிக் கட்டத்தில் உள்ளது மற்றும் விரைவில் தொடங்கப்படலாம் என தெரிவிக்கப்படுட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 7 கோடிக்கும் அதிகமான EPFO சந்தாதாரர்களுக்கு PF பணத்தை எடுப்பதை வேகமாகவும், எளிமையாகவும், மேலும் வசதியாகவும் மாற்றுவதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
EPFO உறுப்பினர்கள் UPI அடிப்படையிலான சேவைகளைப் பயன்படுத்தி, தகுதியுள்ள PF நிதிகளைத் தங்களின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும் பயனர்கள் தங்களின் தகுதியான வருங்கால வைப்பு நிதி இருப்பில் 50% முதல் 75% வரை திரும்பப் பெற அனுமதிக்கப்படலாம். இருப்பினும், வரம்புகள் மற்றும் நிபந்தனைகள் அதிகாரப்பூர்வ அமலாக்கத்திற்குப் பிறகே அறிவிக்கப்படும்.
பயனர்கள் UPI மற்றும் UPI வசதியுள்ள ஏடிஎம்களைப் பயன்படுத்தி, தங்களது EPF இருப்பில் 75 சதவீதம் வரை உடனடியாக வங்கிக் கணக்கில் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பயனரின் மொத்த வருங்கால வைப்பு நிதி சேமிப்பில் குறைந்தபட்சம் 25% கணக்கிலேயே இருக்கும் என்றும், அதைத் திரும்பப் பெற முடியாது என்றும் இந்த முன்மொழிவு தெரிவிக்கிறது. அவசர தேவைக்காக பணம் எடுக்கும் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. புதிய அமைப்பின் சோதனை நிறைவடைந்துள்ள போதிலும், அந்த வசதி இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்படவில்லை.
இதை அறிமுகப்படுத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். EPFO இறுதித் தொடக்க அறிவிப்பையும் செயல்பாட்டு வழிகாட்டுதல்களையும் வெளியிட்ட பின்னரே, சந்தாதாரர்கள் UPI மற்றும் ATM பணம் எடுக்கும் சேவைகளைப் பயன்படுத்த முடியும் . ஜூன் மாத இறுதிக்குள் நிகழ வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது.

