எய்ம்ஸ் மருத்துவமனைகளை விட்டு வெளியேறும் மருத்துவர்கள்.. காரணம் என்ன?
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள தகவலின்படி, 2022 முதல் 2024 வரையிலான இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருந்து சுமார் 429 அரசு மருத்துவர்கள் வேலையை விட்டு வெளியேறி தனியார் மருத்துவமனைகளில் இணைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 52 மருத்துவர்களும், ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 38 மருத்துவர்களும், ராய்பூர் எய்ம்ஸில் இருந்து 35 மருத்துவர்களும் வேலையை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல, பிலாஸ்பூர் எம்ய்ம்ஸில் இருந்து 32 மருத்துவர்களும், மங்கலகிரி எய்ம்ஸில் இருந்து 30 மருத்துவர்களும் தங்கள் வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஏற்கெனவே மருத்துவர்கள் மற்றும் பல்வேறு பணியாளர்கள் பற்றாக்குறையால் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகங்கள் திண்டாடி வருகின்றன. குறிப்பாக, மத்திய அரசின் 20 எய்ம்ஸ்களிலும் 3இல் 1 பங்கு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. 1956இல் முதன்முதலில் தொடங்கப்பட்ட டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், 46 காலிப் பணியிடங்களும், போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் 71 காலிப் பணியிடங்களும் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 103 காலிப்பணியிடங்களும் உள்ளன. இதர எய்ம்ஸ்களில் 20% முதல் 35% வரை காலிப்பணியிடங்கள் உள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வெளியேறுவதற்கு முக்கியக் காரணமாக, ஆள் பற்றாக்குறையால் ஏற்படும் பணிச் சுமை, குறைந்த சம்பளம், பதவி உயர்வில் தாமதம் மற்றும் அரசுப் பணியில் உள்ள கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை, வெளியேறிய மருத்துவர்கள் பட்டியலிடுகின்றனர். அதேசமயம், தனியார் மருத்துவமனைகளில் எய்ம்ஸை விட, 4 முதல் 10 மடங்கு சம்பளம் கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
எய்ம்ஸ் போன்ற அரசு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள் வெளியேறி வருவதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக, மத்திய அரசு தலையிட்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.