ரூ.60 கோடி மோசடி | ஷில்பா ஷெட்டி தம்பதி மீது புகாரளித்த தொழிலதிபர்..!
லோட்டஸ் கேபிடல் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் எனும் நிறுவனத்தின் இயக்குநரான தொழிலதிபர் தீபக் கோத்தாரி தாக்கல் செய்திருந்த புகாரில் இந்த சம்பவம் 2015 முதல் 2023க்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் நடந்ததாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், 2015 ஆம் ஆண்டு ராஜேஷ் ஆர்யா என்ற நபர் மூலம் ஷில்பா ஷெட்டி மற்றும் குந்த்ராவின் அறிமுகம் தமக்குக் கிடைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், 2015 முதல் 2023 வரையிலான காலக்கட்டங்களில், ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரும் நடத்திய நிறுவனத்தில், தொழில் விரிவாக்கத்திற்காக முதலீடு என்ற பெயரில் 60 கோடி ரூபாய் கடனாக கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்நிறுவனம் திவால் ஆகிவிட்ட நிலையில் அத்தொகை திரும்ப வரவில்லை என்றும் அவர்கள் அந்தத் தொகையை தனிப்பட்ட செலவுகளுக்குப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஷில்பா ஷெட்டியும் குந்த்ராவும் 2015 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் Best Deal TV எனும் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தின் இயக்குநர்களாக இருந்தனர். அந்த நிறுவனத்தில் ஷில்பா ஷெட்டி 87%க்கும் அதிகமான பங்குகளை வைத்திருந்தார். தற்போது இந்த நிறுவனம் செயல்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோத்தாரியின் கூற்றுப்படி, 2015 ஆம் ஆண்டில், ஷில்பாவும் குந்த்ராவும் ஒரு இடைத்தரகர் மூலமாக தன்னை அணுகி, தாங்கள் நடத்திய பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.75 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்ததாகத் தெரிவித்திருக்கிறார். கடனுக்கான வட்டி விகிதமாக 12% தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களோ கடனாக அல்லாமல், முதலீடாக வழங்குமாறு கேட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதியினர் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அவர்களது தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இதில் எவ்வித குற்றமுமில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக ஷில்பா ஷெட்டி தம்பதி இந்தாண்டு தொடக்கத்திலும் மோசடி வழக்கில் சிக்கியிருந்தனர். ராஜ் குந்த்ரா 4 ஆண்டுகளுக்கு முன் பிட் காயின் மோசடி வழக்கில் கைதாகியிருந்தார். ஷில்பா ஷெட்டி தமிழில் மிஸ்டர் ரோமியோ, குஷி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.