மும்பை - அகமதாபாத் | 2027இல் புல்லட் ரயில் சேவை.. ஜப்பானில் 15 அதிகாரிகள்!
இந்தியாவின் மிக முக்கிய உள்கட்டமைப்பு திட்டமான மும்பை-அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் திட்டம் ஜப்பானின் கடனுதவியுடன் கடந்த 2017-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், நிதியுடன் சேர்த்து ஷின்கான்சென் எனப்படும் புல்லட் ரயிலின் தொழில் நுட்பத்தையும் வழங்குவதாக ஜப்பான் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இதற்கான பணிகள் 2021ஆம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்திருந்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புல்லட் ரயில் சேவை 2027 ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைமுறைக்கு வரும் எனவும் இச்சேவையின் முதல்பகுதியாக சூரத் முதல் பிலிமோரா வரையிலும் அதன்பிறகு, வாபி முதல் சூரத் வரையிலும் எனப் படிப்படியாக விரிவுபடுத்தி கடைசியாக அகமதாபத் முதல் மும்பை வரை 508 கி.மீ தூரத்துக்கு இயக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில்தான், புல்லட் ரயிலுக்கான கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, புல்லட் ரயிலை இயக்குவது குறித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 15 இந்திய ரயில்வே அதிகாரிகள் தற்போது ஜப்பானில் தங்கியிருந்து புல்லட் ரயில்கள் என அழைக்கப்படும் ’ஷின்கான்சென்' ரயில்களை இயக்குவதற்கான நுணுக்கங்களைக் கற்று வருகின்றனர்.
சுமார் 13 மாதங்கள் நீடிக்கும் இந்தப் பயிற்சியில், ரயிலை இயக்குவது மட்டுமின்றி, அவசரகால மேலாண்மை, துல்லியமான நேரக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் ஆகியவை கற்பிக்கப்படுகின்றன. பயிற்சியின்போது இந்திய லோகோ பைலட்கள் ஜப்பானிய முறைப்படி சிக்னல்களைச் சரிபார்த்து ரயிலை இயக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக, மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தில் ரயில்கள் அதிகபட்சமாக 308 கி.மீ வேகத்தில் பயணிக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம், மும்பை அகமதாபாத் இடையிலான பயண நேரத்தை 2 மணி நேரம் வரை குறைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியிடப்பட்ட 2026-2027 மத்திய பட்ஜெட்டில் மும்பை - புனே, புனே - ஹைதராபாத், ஹைதராபாத் - பெங்களூரு, ஹைதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரு, டெல்லி - வாரணாசி, வாரணாசி - சிலிகுரி ஆகிய 7 அதிவேக ரயில் தடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

