பீகார் | சபாநாயகர் பதவிக்குப் போட்டிபோடும் பாஜக - ஜேடியு.. அமைச்சரவையிலும் கட்சிகள் பேரம்!
பாஜக மற்றும் ஜேடியு ஆகிய இரண்டு கட்சிகளும் சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக கூட்டணியே நம்பமுடியாத, எதிர்பாராத வெற்றியை பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. அது, 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. நிதிஷ் குமார் தலைமையில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. நிதிஷ் நவம்பர் 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து, பீகாரில் அதற்கான பணிகள் வேகம் பிடித்து வருகின்றன.
இந்நிலையில், பாஜக மற்றும் ஜேடியு ஆகிய இரண்டு கட்சிகளும் சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஐக்கிய) கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேயான ஒரு முக்கியமான கூட்டம் இன்று புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதில் சபாநாயகர் பதவி, முக்கிய அமைச்சர்கள் இலாகாக்கள் ஒதுக்கீடு ஆகியவை குறித்து கலந்தாலோசிக்கப்பட இருக்கிறது.
அந்த வகையில், இரு கட்சிகளும் சபாநாயகர் பதவிக்குப் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அந்தப் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய அரசாங்கத்தில், பாஜக தலைவர் நந்த் கிஷோர் யாதவ் சபாநாயகராகவும், ஜேடியுவின் நரேந்திர நாராயண் யாதவ் துணை சபாநாயகராகவும் பதவி வகித்தனர். இதனால், தற்போதும் பாஜக அதையே விரும்புகிறது. மறுபுறம், சபாநாயகர் பதவி தவிர, பல முக்கிய அரசாங்க இலாகாக்கள் குறித்தும் பாஜக தரப்பில் கடுமையான பேரம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவம் மோர்ச்சா (மதச்சார்பற்ற), உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சி ஆகிய கூட்டணியின் சிறிய கூட்டணிக் கட்சிகளுடன் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையான விவாதங்களை நடத்தி வருகிறார். இதனால், புதிய அரசாங்கத்தில் அவர்களின் பங்கும் முக்கிய இடம்வகிக்கும் எனத் தெரிகிறது. அதன்படி, ஒவ்வொரு 6 எம்எல்ஏக்களுக்கும் ஓர் அமைச்சர் பதவியை ஒதுக்கும் ஒப்பந்தத்திற்கு NDA கட்சிகள் கொள்கையளவில் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

