பிகார் தேர்தல் | தேர்தல் தேதி அறிவிப்பு... எத்தனை கட்டங்கள்? முழு விபரம்!
பிகார் தேர்தல் மாநில தேர்தல் என்பதையும் தாண்டி தேசிய அளவிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்திருக்கிறார்.
243 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட பிகார் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கு முன்பே சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல கட்ட ஆலோசனைகளை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது. இத்தகைய சூழலில்தான், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஆய்வுப்பணிகள் பிகாரில் நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர், "மாநிலத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை சுமூகமாக நடத்தி முடிப்பதற்காக வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கையின்போது 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது" எனத் தெரிவித்தார். இந்நிலையில்தான், பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையத் தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்திருக்கிறார்.
இரண்டு கட்டங்களாக பீகார் தேர்தல்
243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தல் நவம்பர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்டத்தேர்தல் 11 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதல் கட்டத் தேர்தலில் 121 தொகுதிகளுக்கும், நவம்பர் 11ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில் மீதமுள்ள 122 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை 14 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 10 தேதி தொடங்கி அக்டோபர் 17 வரையும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 13-ம் தேதி தொடங்கி அக்டோபர் 20 வரையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிகாரில் 7.43 கோடி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில், 14 லட்சம் பேர் முதன்முறை வாக்காளர்களாக உள்ளனர்.
2020 பீகார் சட்டப்பேரவை தேர்தல் ஓர் பார்வை
கடந்த, 2020 கொரோனா காலக்கட்டத்தில் பிகாரில் நடைபெற்ற தேர்தலை, அக்டோபர் முதல் நவம்பர் வரை 3 கட்டங்களாக இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி இருந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. தொடர்ந்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராக பதவியேற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட மாகாகத்பந்தன் கூட்டணி 110 இடங்களை பெற்றிருந்தது. தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் உருவானது.
தேர்தல் களம் எப்படி இருக்கிறது?
இந்த தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் விகாசில் இன்ஸான், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி (பசுபதி) உள்ளிட்ட கட்சிகள் மகாகத்பந்தன் கூட்டணியை அமைத்திருக்கின்றன.
மறுமுனையில், ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் பாஜக, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து களத்தில் இருக்கின்றன.
ஓட்டை பிரிக்கும் ஜன் சுராஜ் !
மேலும், இந்தத்தேர்தலில் தேர்தல் வியூக நிபுணராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோரும் தனது ஜன் சுராஜ் கட்சியுடன் களத்தில் உள்ளார். பிரசாந்த் கிஷோரின் இந்த கட்சி பிகார் தேர்தலில் வெற்றிக்கான வாக்குகளை பிரிக்கும் என பார்க்கப்படுகிறது. இளைஞர்களின் ஆதரவு பெரும்பான்மையாக பிரசாந்த் கிஷோருக்கு இருக்கிறது. இவ்வாறு பிகார் தேர்தல் களத்தில் கடுமையான போட்டி நிலவுகிறது.