”பிரதமர் மோடி மட்டும் வெளிநாடு செல்வது ஏன்?” - பஞ்சாப் முதல்வர் விமர்சனம்!
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களால் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. பாரசீக வளைகுடாவை சர்வதேச சந்தைகளுடன் இணைக்கும் ஹார்முஸ் நீர்வழிப்பாதை வழியாகவே உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் செல்கிறது. இப்பகுதியில் பல வாரங்களாக நீடிக்கும் மோதலும் நிலையற்ற தன்மையும் கப்பல் போக்குவரத்தைச் சீர்குலைத்து, சரக்கு நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தி, எண்ணெய் டேங்கர்களுக்கான காப்பீடு மற்றும் போக்குவரத்துச் செலவுகளைக் கடுமையாக அதிகரித்துள்ளன.
இதனால், இந்தியாவில் ஏற்கனவே, எரிவாயு தட்டுப்பாடு காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதன்மூலம், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயந்துள்ள நிலையில், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடும் வரக்கூடும் என கூறப்பட்டு வந்த நிலையில் தான், கடந்த மே-15 முதல் பெட்ரோலுக்கு 3.14 ரூபாயும், டீசலுக்கு 3.11 ரூபாயும் மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலையேற்றத்திற்கு முன்பாக பல்வேறு மேடைகளில் பேசிய பிரதமர் மோடி, எரிபொருட்களை இறக்குமதி செய்ய அதிக அளவில் அன்னிய செலாவணி தேவைப்படுகிறது. எனவே, வாகனங்களை இயக்க செலவழிக்கப்படும் எரிபொருளைச் சேமிக்க, பள்ளிகள் கொரோனா பெருந் தொற்று காலம் போல மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும். நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதை சிறிது காலத்திற்கு தவிர்க்க வேண்டும். சமையல் எண்ணெயை உணவுகளில் குறத்துக் கொள்ள வேண்டும் என இந்திய மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் கருத்துக்கு, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு தற்போது பிரதமர் மோடி அரசு முறைப்பயணம் மேற்கொண்டிருப்பது மேலும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தசூழலில் தான், நாட்டு மக்களை வெளிநாடு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துவிட்டு பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருவதை பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். அந்தவகையில் தான், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பிரதமர் மோடி தான், முதலில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், மக்களை வீட்டில் இருந்து பணியாற்றுங்கள் என பிரதமர் மோடியால் வீட்டில் இருந்து ஏன் பணியாற்ற முடியவில்லை? அவர் தான் முதலில் வெளிநாடுகளுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும். எங்கோ நடக்கும் போருக்கு நமக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

