கட்டுமஸ்தான உடல் ஆசை.. இளைஞர்களைக் கொல்லும் ஸ்டெராய்டு மோகம்.. நிபுணர்கள் எச்சரிக்கை!
இந்திய நகர்ப்புற இளைஞர்களிடையே விரைவாகக் கட்டுமஸ்தான தேகத்தை வளர்க்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஸ்டெராய்டுகள், வீரியமிக்க 'ப்ரீ- வொர்க்அவுட்' தூண்டல் பொடிகள் மற்றும் கட்டுப்பாடு இல்லாத ஜிம் சப்ளிமென்ட்டுகளின் பயன்பாடு ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளதாக இதய நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வரும் ஃபிட்னஸ் காணொளிகள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களின் விளம்பரங்களை நம்பி, பல இளைஞர்கள் இந்த ஆபத்தான தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால், முற்றிலும் ஆரோக்கியமாகத் தோன்றும் இளைஞர்களுக்குக் கூட மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் திடீர் மரணங்கள் ஏற்படுவதாக எய்ம்ஸ் மருத்துவர் மயங்க் யாதவ் தெரிவித்துள்ளார்.
முறையான இதயப் பரிசோதனை இன்றி தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது தற்கொலைக்குச் சமம் என்று கூறும் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராகுல் சந்தோலா, சாதாரண ரத்தப் பரிசோதனை அல்லது ஈ.சி.ஜி (ECG) மூலமாக இதயத்தில் உள்ள மறைமுகப் பாதிப்புகளைக் கண்டறிய முடியாது என்றும், இதற்காக மேம்பட்ட ஏஐ தொழில்நுட்பப் பரிசோதனைகள் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். சமூக ஊடக அங்கீகாரத்துக்காக ஆரோக்கியத்தைப் பணயம் வைக்க வேண்டாம் என்றும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

