வெப்பவாத பாதிப்பு | பாரசிட்டமால் கூடாது.. பொது சுகாதாரத் துறை கூறுவது என்ன.?
தமிழகத்தில் கடும் கோடையால் வெப்பவாதம் அதிகரித்துள்ள நிலையில், உடல் வெப்பநிலையை குறைக்க பாராசிட்டமால் மாத்திரை உட்கொள்வது ஆபத்தானது என பொது சுகாதாரத் துறை எச்சரிக்கிறது. மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து எடுத்தால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படலாம். மயக்கம், சோர்வு இருந்தால் நிழல், காற்றோட்டம் உள்ள இடத்தில் படுக்க வைத்து தண்ணீர், இளநீர், மோர் கொடுத்து வெப்பத்தை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோடையின் தாக்கத்தால் வெப்பவாத பாதிப்புக்கு உள்ளானவர்களின் உடல் வெப்பநிலையை குறைக்க பாராசிட்டமால் மருந்தை அளிக்கக் கூடாது என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக, கோடை கால நோய்கள், வைரஸ் தொற்றுகள் பரவும் சூழல் எழுந்துள்ளது.
வெப்பவாத பாதிப்புக்கு உள்ளாவோரின் உடல் வெப்ப நிலையை குறைக்க மருத்துவரின் பரிந்துரையின்றி சிலர் வெவ்வேறு மாத்திரைகளை உட்கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வெப்பவாதம் பாதிக்கப்பட்டு எவருக்கேனும் மயக்கம் ஏற்பட்டோலோ, உடல் சோர்வாக காணப்பட்டாலோ நிழல் மற்றும் காற்றோட்டம் உள்ள இடங்களில் ஒரு பக்கமாக படுக்க வைப்பது அவசியம்.. அவர்களை தண்ணீர், இளநீர், மோர் பருகச் செய்து உடல் வெப்ப நிலையை குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

