உயரும் கடல் மட்டம்; தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களுக்கு ஆபத்து., அண்ணா பல்கலைக்கழக ஆய்வு சொல்வது என்ன?
கடல் மட்டம் உயருவதால் சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடல் மட்டம் உயருவதால் நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும் எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராமச்சந்திரன் மேற்கொண்ட ஆய்வில் பல அதிர்ச்சி தரும் உண்மைகள் தெரியவந்துள்ளன. காலநிலை மாற்றத்தால் தற்போது தேவைப்படும் உடனடி நடவடிக்கைகளையும் இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன.
மத்திய அரசு, செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்த கடல் மட்ட உயர்வு விகிதங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 1991ஆம் ஆண்டில் இருந்த கடல் மட்ட உயரத்தை அடிப்படையாக வைத்து பேராசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதி வாரியாகவும் தகவல்களை திரட்டியதன் அடிப்படையில் 1991 முதல் 2023க்கு இடைபட்ட காலகட்டத்தில் ஆண்டுக்கு 3.4 மில்லி மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் உயர்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த கணக்கின்படி வைத்தால் கிட்டத்தட்ட 2100 ஆம் ஆண்டில் கடல் மட்டம் 25 செ.மீ. அளவுக்கு அதிகரிக்கலாம். ஒருவேளை கரியமில வாயு உமிழ்வு, வெப்பநிலை ஆகியவை மேலும் அதிகரித்தால் இந்த அளவு அதிகபட்சமாக 110 செ.மீ. ஆக உயரலாம். இதனால் ஆந்திராவின் நெல்லூர், மேற்கு வங்கத்தின் சுந்தர்பன், கேரளாவின் திருச்சூர், மஹாராஷ்டிராவின் ராய்காட், குஜராத்தின் கட்ச் ஆகிய நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படும். கடலோர மாநிலங்களில் ஏதேனும் ஒரு நகரமாவது இப்படி கடுமையான பாதிப்பை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ள அதே வேளையில்தான் தமிழ்நாட்டில் நாகை, திருவாரூர் மாவட்டங்களும் அந்த பட்டியலில் இணைந்துள்ளன.
இது ஒருபுறம் இருக்க கடல் மட்டம் உயர்வால் சென்னை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பருவமழைக் காலங்களில் அதிக பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வெள்ளம் ஏற்படும் சமயத்தில் ஊருக்குள் புகும் கடல் நீரை வெளியேற்றுவதில் இச்சிரமம் ஏற்படும்.
நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், அதில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது கடலோர மாவட்டங்களில் 2100ஆம் ஆண்டில் கடல் மட்டம் அதிகபட்சமாக 52 செ.மீ.க்கும் மேல் உயரும் என உத்தேசமாக கணிக்கப்பட்டுள்ளது. கூவம், அடையாறு முகத்துவாரம், முட்டுக்காடு, பழவேற்காடு ஆகிய பகுதிகள் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கடல் மட்ட உயர்வின் தாக்கங்கள் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பதால் உள்ளூர்வாசிகளின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் குறித்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டிருக்கிறது.