திருச்செந்தூர் | நகைக்காக காவலரின் தாய் கொலை - இளம் பெண் கைது
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தேரிப்பனை சிஎஸ்ஐ கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் ஜெயபால் - வசந்தா தம்பதியர் இவர்களுக்கு சபிதா என்ற மகளும் வினோத், விக்ராந்த் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமான நிலையில், சபிதா, வினோத் ஆகியோர் கோயம்புத்தூரிலும், காவலரான விக்ராந்த் சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்திலும் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், வசந்தா இருந்த வீடு நேற்று மதியத்துக்குப் பிறகு நீண்ட நேரமாக பூட்டி கிடந்துள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், அவரது மகனான போலீஸ்காரர் விக்ராந்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில், பின்பக்கம் சென்று பார்த்தபோது கதவு திறந்து நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வசந்தா இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் டிஎஸ்பிக்கள் சாத்தான்குளம் சுபகுமார், திருச்செந்தூர் மகேஷ் குமார், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் செல்வரதி (24) என்பவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மீரான்குளத்தில் பதுங்கி இருந்த செல்வரதியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து நகைகளும் மீட்கப்பட்டது. ஏற்கனவே செல்வரதி மீது நகைக்காக சிறுவனை கடத்தி கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நகைக்காக இளம்பெண், காவலரின் தாயை தலையணையால் அமுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.