
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சிற்றரசு தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போத்தசந்திரம் கிராமப் பகுதியில் கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து கஞ்சா செடிகளை அந்த பகுதியில் வளர்த்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் போத்தசந்திரம் அருகே உள்ள டி.தம்மாண்டரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா என்பவருடைய மகன் மது (23) என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இளைஞரைக் கைது செய்து 350 கிராம் எடையுள்ள கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சொந்த ஊரில் கஞ்சா செடிகளுக்கு உரம் போட்டு வளர்த்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.