திருப்பூர் | திருமணமான 78 நாளில் விபரீத முடிவெடுத்த இளம் பெண் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
செய்தியாளர்: ஹாலித் ராஜா
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். (ஈரோடு இடைத்தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.) இவரது மகள் ரிதன்யா (27) என்பவருக்கு, திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணன் என்பவரின் மூத்த மகன் வழி பேரன் கவின் குமார் (28) என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியமூவரும் சேர்ந்து கடுமையாக சித்திரவதை செய்வதாகவும், இந்த வாழ்க்கையை இனி தன்னால் வாழ முடியாது எனவும் மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க தனக்கு உடன்பாடு இல்லை என தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ அனுப்பி விட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மாத்திரையை உட்கொண்டு காரிலேயே சரிந்து விழுந்துள்ளார்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரிதன்யாவின் உடலை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 78 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே ரிதன்யா தற்கொலை செய்து கொள்ளும் முன்பு தனது தந்தைக்கு அனுப்பிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சேயூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ரிதன்யாவிற்கும் அவரது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தாருடன் கருத்து வேறுபாடு இருந்து வந்ததும் தெரியவந்தது. ரிதன்யாவை தற்கொலைக்கு தூண்டியது உறுதியான நிலையில், 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி மாமியார் சித்ராதேவி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், திருமணத்தின் போது பெண் வீட்டில் 500 சவரன் தருவதாகக் கூறிய நிலையில், 300 சவரன் நகை போட்டுள்ளனர். 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் மற்றும் 2.5 கோடி ரூபாய் செலவு செய்து திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் நடைபெற்ற 10 நாட்களில் இருந்து கணவரின் தாய் தந்தை ரிதன்யாவிடம் மீதமுள்ள 200 சவரன் நகை இன்னும் தரவில்லை என்று திட்டி சித்தரவதை செய்து,ள்ளனர்.
எதற்கெடுத்தாலும் திட்டி வந்த அவர்கள் ஒரு மணி நேரம் நிற்க வைத்து மனரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர். கவின் குமார் குடும்பத்திற்கு வாடகை போன்ற மாதாந்திர இதர வருமானம் மட்டும் 20 லட்சம் ரூபாய் இருந்ததாகவும் இதன் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து முழுநேரமும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த போதும் சில நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதே என பெற்றோர் ஆறுதல் தெரிவித்து வந்ததால் மனமுடைந்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.