ஜனநாயகன்| சென்சார் சான்றிதழ் வழங்கப்படுமா..? நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால், ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. சென்சார் சான்றிதழுக்கான வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசிப் படமான இது ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் இப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் தொடர்ந்து இழுபறி நடந்துவருகிறது. தணிக்கை சான்றிதழ் பெருவதற்கு கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சென்சாருக்கு அனுப்பப்பட்டது, படத்திற்கு U/A சான்றிதழையும் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் தற்போது வரை தணிக்கைச் சான்று தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது..
இந்த விவகாரம் தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சில காட்சிகளை நீக்கினால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய தணிக்கை வாரியம் கூறியதாகவும் அதனைப் படக்குழு செய்ததாகவும், ஆனால் அதன்பின்பும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
தொடர்ந்து தணிக்கை வாரியத்தின் தரப்பிலிருந்தும் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியான ஜனவரி 9ஆம் தேதி இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது. இந்தசூழலில் படம் ரிலீஸ் ஆகுமா? எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கவலை அதிகரித்துள்ளது..
இன்று பிரச்னை தீர்க்கப்படுமா..?
நடிகர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் இன்று வெளியாகவிருந்த நிலையில், படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிச்சென்றுள்ளது. படக்குழுவினருக்கே எப்போது சென்சார் கிளியரன்ஸ் கிடைக்கும் என தெரியாததால், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றே அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்தசூழலில் தணிக்கை சான்றுக்கான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது..
விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாதது தொடர்பான வழக்கில், இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. தணிக்கை சான்று கிடைக்காததை எதிர்த்து ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த 6ஆம் தேதி விசாரித்திருந்த நீதிபதி ஆஷா, அனைத்துத் தரப்பு வாதங்களை கேட்டறிந்து வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

