”விஜய் இன்னும் இரண்டு தலைமுறைக்கு ஆட்சி செய்வார்..”| CM Vijay | R V Udayakumar
பலராம் - பெர்ரி நடித்துள்ள ஆல்பம் Silent Influencer. அஸ்வமித்ரா இசையமைத்துள்ள இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இதன் வெளியீடு நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியபோது, "இன்று எல்லோரும் டிவிக்கு முன்னால்தான் அமர்ந்திருக்கிறார்கள். எத்தனை பேர் வாக்களிப்பார்கள்?, தவெக ஆட்சி நிற்குமா என்ற கேள்விகள் எல்லாம் இருந்தது. ஆனால் ஒரு மாபெரும் வெற்றியை மீண்டும் சபையில் நிரூபித்த முதல்வர், கலை உலக சகோதரர் விஜய்க்கு என்னுடைய இதயம் கனிந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்தும் முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்த முதல்வராக விஜய் அமர்ந்திருப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
புரட்சித்தலைவருக்கு பிறகு ஒரே அடியில் அடித்தது விஜய்தான். நிறையபேர் இதனை ஏற்றுக்கொள்ள சிரமப்படுகிறார்கள். அவர் கட்சி ஆரம்பிக்கும்போதே இதே மேடையில் `ஏன் வரக்கூடாது; வரட்டும், ஒரு மாற்று ஆட்சியை தரட்டும்' என நான் கூறி இருக்கிறேன். ஒருவர் எந்த அளவுக்கு எடுத்த முடிவில் உறுதியாக இருந்து ஜெயித்தே ஆக வேண்டும் என இறங்குகிறாரோ, அவருக்கு வெற்றி நிச்சயம். நமக்கு இருக்கும் வலிமைதான் முக்கியம். அந்த வலிமை முதல்வருக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. அதுமட்டுமல்ல, மற்றவர்கள் என்ன எல்லாம் செய்வார்கள் என தெரிந்துகொண்டு அதற்கும் சேர்த்து யோசிக்கிறார். நிச்சயமாக, இன்னும் இரண்டு தலைமுறைக்கு அவர் இந்த ஆட்சியிலே இருப்பார் என்று நான் உறுதியாக கூறுகிறேன். விஜயிடம் இருக்கும் விவேகம் அளப்பரியது. அந்த விவேகத்திற்கு தோல்வியே கிடையாது. நம்முடைய குடும்பத்திலிருந்து ஒருவர் வரும்போது வாழ்த்துவோம்" என்றார்.

