"தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண என்ன தகுதி இருக்குனு கேட்டாங்க!" - மனமுடைந்து பேசிய ஹரீஷ் கல்யாண் | Diesel
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ள `டீசல்' படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் ஹரீஷ் கல்யாண் "ஒரு சில நாட்களுக்கு முன்பு தேவா (டீசல் பட தயாரிப்பாளர்) சாரிடம், 'இந்தப் படம் தீபாவளிக்கு வருவதற்கு என்ன தகுதி இருக்கிறது'என கேட்டிருக்கிறார்கள். பெரிய ஹீரோ இருக்கிறாரா, பெரிய இயக்குநர் இருக்கிறாரா, பெரிய ஹீரோயின் இருக்கிறாரா, பெரிய இசையமைப்பாளர் இருக்கிறாரா என கேட்டிருக்கிறார்கள். உண்மையில் அவர் மிகவும் மனது உடைந்து போய்விட்டார். இதை கேட்ட எனக்கும் வலியாக இருந்தது. தீபாவளிக்கு வர அப்படி என்ன தகுதி தேவை என எனக்குத் தெரியவில்லை. ஒரு நல்ல படம், அதை நன்றாக விளம்பரப்படுத்தும் டீம் இருந்தால் கண்டிப்பாக வரலாம், அப்படித்தானே? எனவே அந்த நம்பிக்கையுடன் தீபாவளிக்கு ஒரு நல்ல, சுவாரஸ்யமான, பொழுதுபோக்காக இருக்கும் டீசல் என்ற படத்துடன் நாங்கள் வருகிறோம்.
எல்லாவற்றுக்கும் மேலாக நான் வணங்கும் இறைவனும், பார்வையாளர்களும் எங்களை கைவிட மாட்டார்கள், கையை பிடித்து கூட்டி செல்வார்கள் என உறுதியாக நான் நம்புகிறேன். ஒரு பழமொழி உண்டு, ஒரு மரத்திலிருந்து பல லட்சம் வத்தி குச்சிகள் தயாரிக்கலாம். ஆனா ஒரு வத்தி குச்சி போதும், பல லட்சம் மரத்தை அழிக்க. எனவே யாரையும் குறைத்து எடை போடாதீர்கள். தீபாவளிக்கு தலைவர் படம், அஜித் சார் படம் என பல நட்சத்திரங்களின் படங்களை பார்த்திருக்கிறேன். இந்த முறை என்னுடைய படமே தீபாவளிக்கு வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. அதையே பெரிய முன்னேற்றமாக நினைக்கிறேன். என் பயணம் கடினமானதாக இருந்திருக்கிறது. ஆனால் அந்த கஷ்டங்களை வெளியே சொல்லி சிம்பதி பெற விரும்பவில்லை. பார்வையாளர்களை திருப்திபடுத்தினால் அதுவே போதும். அவர்கள் நம்மை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைப்பார்கள்." எனக் கூறினார்.