ஜனநாயகன்| மத அடையாளத்துக்கு கண்டனம்.. சென்சார் போர்டுக்கு சாதகமாக தீர்ப்பு!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் தள்ளிப்போனது. சென்னை உயர்நீதிமன்றம், தணிக்கை வாரியத்தின் மேல் முறையீட்டை ஏற்று, படத்தில் மத பிரச்சனையை ஏற்படுத்தும் காட்சிகள் உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால், படம் வெளியீடு மேலும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் 'ஜனநாயகன்'. விஜயின் கடைசி படமான இதில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்த இப்படம் சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் தள்ளிப்போனது. இதற்காக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது படத்தின் தயாரிப்பு நிறுவனம். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தில் சில மாற்றங்களுடன் யு/ஏ சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கைக் குழு கடந்த டிசம்பர் 19ம் தேதி பரிந்துரைத்தது. பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை செய்து 24ம் தேதி படம் சமர்ப்பிக்கப்பட்டது, 29ம் தேதி யு/ஏ சான்றிதழ் வழங்க சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென ராணுவம் தொடர்பான காட்சிகள் குறித்து புகார் வந்துள்ளதாக கூறி, படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு கடந்த 6ம் தேதி தணிக்கைக் குழு தலைவர் அனுப்பினார்.
ஜனநாயகன் தயாரிப்பாளர் தரப்பு, இதை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் மேல் வழக்கு தொடுத்து நீதிமன்றத்தை நாடியது. திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனவரி 9ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். ஆனால், அன்று மாலையே தணிக்கைக் குழு மேல்முறையீடு செய்ய, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்தது. இதனால் ஜனநாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
அதன் பிறகு 12ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 15ம் தேதி மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கில் தலையிட மறுத்து, உயர்நீதிமன்றமே விசாரிக்க அறிவுறுத்தியது. அதன்படி 20ம் தேதி மீண்டும் உயர்நீதிமன்றத்திடமே வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கு காலவரையறை இன்றி தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கின் தீர்ப்பு ஜனவரி 27ம் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன?
அதன்படி இன்று இவ்வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் படத்துக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி பி.டி.ஆஷாவின் உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் மேல் முறையீட்டை ஏற்றது உயர்நீதிமன்றம். வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க போதிய அவகாசத்தை அளித்திருக்க வேண்டும் எனக் கூறிய உயர் நீதிமன்றம் இம்முறை தணிக்கை வாரியத்துக்கு உரிய அவகாசம் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும் படத்தில் பாதுகாப்புப் படை சின்னம் பயன்படுத்தப்பட்டதால் நிபுணர் குழுவுக்கு அனுப்பப்பட்டது எனவும், ஜனநாயகன் திரைப்படத்தில் மத பிரச்சனையை ஏற்படுத்தும் காட்சிகள் உள்ளன. வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதப்பிரச்சனையை ஏற்படுத்தும் வசனம் ஜனநாயகன் படத்தில் உள்ளது எனவும் மத அடையாளங்களை அவதூறு செய்வதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்டனம் தெரிவித்துள்ளது. எனவே இவ்வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷாவே மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தணிக்கை வாரிய வழக்கில் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அருள்முருகன் ஆகியோர் அமர்வு இன்று இந்த தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து மேலும் தள்ளிப் போகிறது ஜனநாயகன். இனிமேல் இந்த வழக்கில் தணிக்கை வாரியம் கோரிய படி, படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த தான் அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இனி வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க துவங்கி என்ன என்னென்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

