“திருமணமா.. சந்தோஷமா இரண்டில் எது உங்கள் விருப்பம்?” - விவாதத்தைக் கிளப்பிய நடிகை ரம்யா
சிம்பு நடிப்பில் உருவான ‘குத்து’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ரம்யா. தொடர்ந்து ‘பொல்லாதவன்’, ‘வாரணம் ஆயிரம்’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றார். திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தபோதே, 2012ஆம் ஆண்டு ராகுல் காந்தி முன்னிலையில் இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் நீண்டகாலம் அரசியலில் பயணம் செய்து வந்தவர் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு அரசியலில் இருந்து விலகினார். தற்போது, திரைப்பட தயாரிப்புப் பணிகள் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், நடிகை ரம்யா திருமணம் குறித்து தெரிவித்த கருத்து ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. “திருமணம் செய்துகொள்வது என்பது அவ்வளவு முக்கியமானதா? கண்டிப்பாக இல்லை. திருமணம் என்பது நாம் யார் என்பதைத் தீர்மானிக்காது; திருமணம் செய்யாமலேயே நாம் சந்தோசமா வாழவில்லையா? ஒன்று நீங்கள் திருமணம் செய்துகொள்ளுங்கள் அல்லது சந்தோஷமாக இருங்கள்; இந்த இரண்டில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், தன்னிடம் திருமண வாழ்க்கை குறித்து பலரும் கேள்வி எழுப்புவதாக தெரிவித்த அவர், “எனக்கான துணையை இன்னும் அடையாளம் காணவில்லை. அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. நான் தற்போது வேலையில் தீவிரமாக இருக்கிறேன். திருமணத்திற்கான நேரம் வரும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “நான் சொல்லும் கருத்துகள் எல்லோருக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டியதில்லை. இருவர் வலுவான நட்பையும், ஒரே கருத்து சார்ந்த விழுமியங்களையும், ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்துகொள்ளும் தன்மையையும் கொண்டிருக்கும்போது, திருமணம் ஒரு நிறைவான தேர்வாக அமையலாம். திருமணமானவர்கள், மகிழ்ச்சியாக இருப்பவர்கள் நான் சொல்வதை ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

