Gen Z காதலை பேசுகிறதா பூக்கி? | Pookie Review | Vijay Antony | Ajay Dhishan | R K Dhanusha
Gen Z காதலை பேசுகிறதா பூக்கி?(1.5 / 5)
காதலர்கள் பிரிதலும், ஒருவரை ஒருவர் புரிதலுமே `பூக்கி'
காதல் ஜோடி கைலாஷ் (அஜய் திஷன்) - ஆழி (தனுஷா) இடையே மோதல் ஒன்று வெடிக்க, அந்த சண்டை முற்றி போய் மழைபொழியும் டிராஃபிக் சிக்னலில் கைலாஷுக்கு கன்னத்தில் பளார் விடுகிறார் ஆழி, கடுப்பான கைலாஷ் ஆழி கன்னத்தில் பொளேர் விட ப்ரேக்-அப் ஆகிறது இருவருக்கும். இதன் பின்னர் காதல் தோல்வியில் இருந்து வெளியே வர இருவரும் பல முயற்சிகள் எடுக்கிறார்கள். இந்த வேளையில் ஆழிக்கு இன்னொரு துணையும், கைலாஷுக்கு சொந்தகார பெண்ணின் காதலும் கிடைக்கிறது. இருவருக்கும் கிடைக்கும் புது உறவு எப்படி அமைகிறது, பழைய காதல் பற்றி அவர்கள் புரிந்து கொள்வதென்ன? யாரு மனசுல யாரு, அவங்களுக்கு என்ன பேரு? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.
இளம் தலைமுறையினர் காதல் சிக்கல்களை எப்படி கையாளுகிறார்கள் என்பதை காமெடி கலந்து கொடுக்க முயன்றிருக்கிறார்கள் இயக்குநர் கணேஷ் சந்திரா மற்றும் கதாசிரியர் புதிய பரிதி. காதல் பிரிவு, துக்கம் என போட்டு வாட்டாமல் ஜாலியாக அவர்களின் தடுமாற்றங்களை பதிவு செய்கிறார்கள்.
நடிப்பு பொறுத்தவரையில் முதன்மை பாத்திரங்களான அஜய் திஷன் மற்றும் தனுஷா இருவரும் சுவாரஸ்யமான நடிப்பை கொடுக்க முயல்கிறார்கள். கோபத்தில் கத்துவது, சண்டையை பெரிதாக்குவது, இணையை புரிந்து கொள்ள மறுப்பது, அவரின் விருப்பங்களுக்கு கவனம் தராதது என சம காலத்து ஆண்களின் சிக்கல்களை வெளிப்படுத்தும் பாத்திரத்தில் அஜய் சிறப்புதான். ஆனாலும் இன்னும் அழுத்தமான நடிப்பு இருந்திருந்தால் படத்துக்கு வலு சேர்ந்திருக்கும். காதல் பிரிவை கையாள தெரியாமல் சாப்பாடு, ஷாப்பிங், ஆன்மிகம் என தடுமாறும் பாத்திரத்தில் தனுஷாவும் பொருத்தம் தான். ஆனால் அவரிடமும் ஈர்க்கும் படியான நடிப்பு எதுவும் இல்லை. சாமியார் பாத்திரத்தில் சுனில், மனநல ஆலோசகராக லட்சுமி மஞ்சு, நண்பர்களாக ஆதித்யா கதிர், விவேக் பிரசன்னா, பெற்றோராக பாண்டியராஜன், இந்துமதி என பல பாத்திரங்கள் வருகின்றனர். யாரும் மனதில் நிற்கவில்லை.
இது இளம் தலைமுறைகள் பற்றிய காதல், ஜென் ஸி காதல் என புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது, கூடவே ரிலேஷன்ஷிப் சம்பந்தப்பட்ட புதுப்புது Tag எல்லாம் பேசப்படுகிறது ஆனால் இதற்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் காதல் என்ற உணர்வு எப்போதும் மாறாதது. அதையே நம்மால் இப்படத்துக்குள் உணர முடியாத போது இந்த பாத்திரங்கள் சேர்ந்தாலோ பிரிந்தாலோ நமக்கு என்ன? என்ற விலகல் தான் நம் மனதில் எழுகிறது. படிக்கட்டில் ஏறும் போது பாண்டியராஜன் கலங்கும் ஒரு இடம் தவிர மற்ற எந்த இடத்திலும் நம்மால் ஒன்ற முடியவில்லை.
படத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது, ஆனால் அதில் நடக்கும் எந்த காட்சியும் சுவாரஸ்யம் இல்லை. இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் பாடல்களோ, பின்னணி இசையோ படத்துக்கு கொஞ்சமும் உதவவும் இல்லை, பொருந்தவும் இல்லை. மேலும் ஏற்கெனவே திணறிக் கொண்டிருக்கும் படத்தை தன் எடிட்டிங் மூலம் எலெக்ட்ரிக் ஷாக் பாய்ச்சுகிறார் எடிட்டர் விஜய் ஆண்டனி. ரிலேஷன்ஷிப் சிக்கல் துவங்கிய, கல்வி நிலையத்தில் ஆன்மீகம், சாதி வெறி, ரீல்ஸில் டிரெண்டான கடிஜோக் நபர், நாய்கள் பேசும் வீடியோ, சிம்புவின் பேட்டிகள் என ஒன்றுக்குகொன்று சம்பந்தமே இல்லாத பல விஷயங்களின் கலவையாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் இந்தக் கதை எதை நோக்கி போகிறது என்றே தெரியவில்லையே என நினைக்கையில், சடன் பிரேக் அடித்து க்ளைமாக்ஸை போடுகிறார்கள்.
மொத்தத்தில் காதல் பற்றி பேச நினைத்து வெறும் இணையதள ட்ரெண்டிங் விஷயங்களை பேசும் ஷோ ரீலாகவே முடிந்துள்ளது இந்த பூக்கி. எடுத்துக் கொண்ட களத்தில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால், ஒரு ஜாலியான ரிலேஷன்ஷிப் டிராமாவாக இருந்திருக்கும்.

