தாயின் மடியில் சரோஜா தேவி.. அம்மாவுக்கு அருகிலேயே நல்லடக்கம்.. நெஞ்சை உருக்கும் இறுதி நிமிடங்கள்..!
நடிகை சரோஜா தேவியின் உடல் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த கன்னடத்து பைங்கிளி காற்றில் கறைந்துள்ளது..
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து, நடிப்பில் தனக்கென தனி சாம்ராஜியத்தை உருவாக்கி வைத்திருந்த நடிகை சரோஜா தேவி, நேற்று காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, திரையுலகினர் உட்பட அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், சரோஜாதேவி வசித்து வந்த மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள இல்லத்திற்கு நேரில் சென்ற கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, அஞ்சலி செலுத்தினார். இதன்பிறகு, இறுதிச் சடங்குகள் அனைத்தும் வீட்டில் வைத்தே முடிக்கப்பட்டது.
தொடர்ந்து, ராம்நகர் மாவட்டத்தில் உள்ள சென்னபட்டணாவுக்கு அருகில் உள்ள தசவாரா கிராமத்திற்கு சரோஜா தேவியின் உடல் கொண்டு வரப்பட்டது. அப்போது, வழி நெடுக்கிலும் பொதுமக்கள் ஒன்று கூடி சரோஜாதேவிக்கு அஞ்சலி செலுத்தியபடி இருந்தனர். ஏராளமான பொதுமக்கலின் அஞ்சலிக்குப் பிறகு, தசவாரா கிராமத்தில் உள்ள சரோஜாதேவியின் தோட்டத்தில் அவரது சமுதாய முறைப்படி சடங்குகள் நடந்தன.
அரசு மரியாதையுடன் சரோஜா தேவியின் உடலை நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில், 21 குண்டுகள் முழங்க அரசுத் தரப்பில் மரியாதை செய்யப்பட்டது. மேலும், சரோஜாதேவியின் உடல் மேல் தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்த நிலையில், இறுதி நிமிடங்களில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உற்றார் உறவினர்கள் அனைவரும் மரியாதை செலுத்திய நிலையில், சரோஜாதேவியின் உடல் அவரது தாயின் சமாதிக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
தாயின் மடியில் உறங்குவது போல, அம்மாவின் சமாதி அருகிலேயே உறங்கச் சென்றுள்ளார் சரோஜா தேவி.. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.