ஹேக் செய்யப்பட்ட நடிகை திரிஷாவின் எக்ஸ் தள அக்கவுண்ட்.. உடனடியாக வந்த பதிவு!
1999-ல் வெளிவந்த ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை திரிஷா, 2002-ல் வெளியான மௌனம் பேசியதே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.
சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இந்திய திரைத்துறையில் பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக ஜொலித்துவரும் திரிஷா மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
சமீபத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கடுத்த படங்களாக அஜித்குமாரின் குட் பேட் அக்லி, கமலின் தக் லைஃப், சூர்யா 45 முதலிய திரைப்படங்களில் திரிஷா நடித்துவருகிறார்.
இந்நிலையில் நடிகை திரிஷாவின் எக்ஸ் தள அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக திரிஷா பதிவிட்டுள்ளார்.
ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் X அக்கவுண்ட்..
எக்ஸ் தளத்தில் சுமார் 6 மில்லியன் ஃபால்லோவர்ஸை கொண்டிருக்கும் நடிகை திரிஷாவின் X அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி குறித்த ஒரு பதிவு போஸ்ட் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக அது டெலிட் செய்யப்பட்டது.
இந்த சூழலில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருக்கும் திரிஷா, “என்னுடைய எக்ஸ் தள அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதை சரிசெய்யும்வரை பதிவிடப்படும் பதிவுகள் நான் பதிபவை அல்ல” என எழுதியுள்ளார்.
அஜித் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்குவரவிருக்கிறது.