ஜப்பானில் ’நாக்-சமா’.. ’குபேரா’ படம் மூலம் நாகார்ஜுனாவுக்கு கிடைத்த புகழ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்துவரும் தனுஷ், இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் நடித்த திரைப்படம் ‘குபேரா’. கதாநாயகனாக தனுஷ், நாயகியாக ராஷ்மிகா, முக்கிய ரோலில் நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடித்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் உருவான இப்படம், ஜூன் 20-ம் தேதி வெளியாகி வெற்றிப்படமாக மாறியது. முதல் 5 நாளிலேயே 100 கோடி கலெக்சனை அள்ளிய இப்படம், தமிழை விட தெலுங்கில் பெரிய ஹிட்டடித்தது.
ஒரு பணக்காரன் தன்னுடைய கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக பிச்சைக்காரர்களின் பெயரில் டெபாசிட் செய்கிறார். அந்த பணத்தால் பிச்சைக்காரன் வாழ்க்கையில் எப்படி ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதாக அமைந்திருக்கும் படத்தின் கதையில், தனுஷ் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படம் வெளியாகி பலரும் தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் நடிப்பை பாராட்டியிருந்தனர். படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிரஞ்சீவியும் தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இருவரையும் பாராட்டி பேசியிருந்தார்.
இந்நிலையில் நாகார்ஜுனாவின் நடிப்பு இந்தியாவில் மட்டுமில்லாமல் ஜப்பானிலும் பெரிதாக பேசப்பட்டுள்ளது. ஜப்பான் மக்கள் ’நாக்-சமா’ என பெயர்வைத்து அழைக்கும் அளவிற்கு நாகார்ஜுனாவிற்கு புகழ் கிடைத்துள்ளது.
’நாக்-சமா’ என அழைக்கப்படும் நாகார்ஜுனா..
குபேரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா ஜப்பானில் பெரும் புகழைப் பெற்றுள்ளார். அங்குள்ள சினிமா ரசிகர்கள் இவரை ‘Nag-Sama’ என்று அன்புடன் அழைக்கின்றனர். ’சமா’ என்பது ஜப்பானிய கலாச்சாரத்தில் கடவுள்கள் அல்லது மிகவும் மதிக்கப்படுபவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
கடந்த மாதம் வெளியான 'குபேரா' திரைப்படத்தில் தீபக் என்ற கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்துள்ள விதம், ஜப்பானிய ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஏற்கெனவே பிரபாஸ், ஜூனியர் என்டிஆர் போன்ற தெலுங்கு நடிகர்களுக்கு ஜப்பானில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், நாகார்ஜுனாவுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.