காலையில் குறைந்த தங்கம்; விலையில் மீண்டும் ஏற்றம்.. விபரம் என்ன?
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேதான் செல்கிறது. நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது என்பது கனவாகவே உள்ளது. தங்கம் ஒருபுறம் என்றால் மறுபுறம் வெள்ளியின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. தீபாவளி மற்றும் திருமண சீசன் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் தங்கம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று காலை தங்கத்தின் விலை இறங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஏறியுள்ளது. விவரம் என்ன விரிவாகப் பார்க்கலாம்.
ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனையானது.
ஆனால் சில மணி நேரங்களிலேயே தங்கவிலை மீண்டும் ஏறியுள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.80,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.90 உயர்ந்து கிராம் ரூ.10,060க்கு விற்பனையாகிறது. அதேபோல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.3 அதிகரித்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. திருமண சீசன் மற்றும் பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.