அஜித் படத்தில் இளையராஜா பாடல்கள்.. பயன்படுத்த இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்!
நடிகர் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிப்பில் ’குட் பேட் அக்லி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இந்த திரைப்படத்தில், ’இளமை இதோ இதோ’, ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ’என் ஜோடி மஞ்சக் குருவி’ ஆகிய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து நீக்கவும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், ’சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறியதாகவும், ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை’ என்றும் கூறியது.
தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு நீதிபதி செந்தில்குமார் முன்பு, இன்று விசாரணைக்கு வரும் எனப் பட்டியலிடப்பட்டிருந்தது. இதையொட்டி இன்றைய விசாரணையின்போது, நடிகர் அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், இசைஞானி இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.