Reko Diq (மாதிரிப்படம்) pt web
உலகம்

பொருளாதாரத்தை நிலைநிறுத்தப்போகும் திட்டம்? மலையென நம்பும் பாகிஸ்தான்

பொருளாதார சிக்கல்கள் மற்றும் கடன் சுமைகளால் தத்தளிக்கும் பாகிஸ்தான், தனது மண்ணில் புதைந்திருக்கும் வளங்களை நம்பிக்கையின் ஒளிக்கீற்றாகப் பார்க்க தொடங்கியுள்ளது.

Angeshwar G

பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் இருக்கும் நாடுகளுக்கு இயற்கையின் வளங்கள் வளர்ச்சிக்கும், நாட்டின் அரசியல் மற்றும் சமூக நிலைத்தன்மைக்கும் பெரும் தூணாக அமைகின்றன. இத்தகைய சூழ்நிலையில், பொருளாதார சிக்கல்கள் மற்றும் கடன் சுமைகளால் தத்தளிக்கும் பாகிஸ்தான், தனது மண்ணில் புதைந்திருக்கும் வளங்களை நம்பிக்கையின் ஒளிக்கீற்றாகப் பார்க்க தொடங்கியுள்ளது.

1990-களின் தொடக்கத்தில், மிகப்பெரிய தங்கம் மற்றும் தாமிரம் வளம், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் சாகாய் மாவட்டத்தில் ரெகோ டிக் (Reko Diq) பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. Barrick Gold Company மற்றும் Antofagasta ஆகிய இரண்டு சுரங்க நிறுவனங்கள், பலூசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அரசுகளுடன் இணைந்து, ஜூலை 1993இல் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. இந்த சர்வதேச நிறுவனங்கள், 2011 ஆம் ஆண்டு வரை சுரங்கம் தொடர்பான கனிம ஆராய்ச்சி மற்றும் நடைமுறை சாத்தியக்கூறு ஆய்வுகளுக்காக சுமார் $240 மில்லியன் செலவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவுகளில் வணிக ரீதியாகவே சுரங்கத்தை நடத்தக் கூடிய அளவிற்கு தங்கமும் தாமிரமும் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

பெருமளவில் தங்கம்

கனடிய சுரங்க நிறுவனமான பாரிக் மைனிங் கார்ப்பரேஷன் மற்றும் பாகிஸ்தான், பலூசிஸ்தான் மாகாண அரசு இணைந்து தொடங்கிய இந்த ரெகோ டிக் மூலம் சுரங்கப்பணிகளை தொடங்குவதற்கான அடுத்தடுத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த ரெகோ டிக் சுரங்க உரிமையில் 50% Barrick நிறுவனத்துக்கும், மீதமுள்ள 50% பாகிஸ்தான் அரசு மற்றும் பலூசிஸ்தான் மாகாண அரசுக்குமிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சுரங்கம் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்தப்பகுதி தனிச்சிறப்புமிக்க கலாசார அடையாளமுள்ள பகுதியாக பார்க்கப்படும் நிலையில், இப்பகுதி பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் இரான் ஆகிய மூன்று நாடுகளையும் ஒட்டி பரவியுள்ளது.

மீண்டும் உயிர்த்தெழுந்த திட்டம்

37 ஆண்டுகளுக்கு சுரங்கத்தின் ஆயுட்காலம் திட்டமிட்டுள்ள நிலையில், திட்டத்தின் செலவு மதிப்பு சுமார் 52 ஆயிரம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்படியாக, பெரும் செலவில் தொடங்கப்படும் இந்த சுரங்க பணியின் மூலம் டன் கணக்கில் தாமிரமும், பல ஆயிரம் கிலோ கணக்கில் தங்கமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் பார்க்கப்போனால், 37 ஆண்டுகால சுரங்கப்பணியின் மூலம் சுமார் ஆறரை லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார ரீதியில் பின் தங்கி இருக்கும் பாகிஸ்தானுக்கு, இந்த சுரங்கப்பணி பெரிய அளவில் கைகொடுக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக, நீண்ட காலமாக சட்டப்போராட்டங்கள் மற்றும் அரசியல் குழப்பங்களால் தாமதமடைந்த இந்த திட்டம், 2022ஆம் ஆண்டு Barrick Gold நிறுவனத்துடன் நடந்த சமரசத்தின் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. நாலாப்புறமும் கடன் சூழ்ந்துள்ள மற்றும் ஐ.எம்.எப். (IMF) ஆதரவை நம்பி இருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கும், அந்நிய செலவாணிக்கும் மிக முக்கியமான ஒன்றாக இருக்குமென பார்க்கப்படுகிறது.

முதலீட்டுகள் மற்றும் சர்வதேச ஆதரவு உறுதி

அதேவேளையில் பலூசிஸ்தான் மாகாணமும் மிகவும் ஏழ்மையான மாகாணம்தான். முதற்கட்டமாக, இந்த சுரங்கப்பணிகளுக்காக, ரூ. 3,500 கோடி நிதியுதவிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், இந்த திட்டத்தின்மூலம், சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் தங்கள் நாட்டுப் பக்கம் திரும்பும் என்று பாகிஸ்தான் பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாகப் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தெரிவித்திருக்கும் செய்தியில், "ரெக்கோ டிக் திட்டத்திற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆறு பில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளன. மொத்த ஆறு பில்லியன் டாலர் நிதியில், 1.5 பில்லியன் டாலர்கள் ஏற்கனவே ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், ரெகோ டிக் அமெரிக்கா ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் (US EXIM Bank) $100 மில்லியனைத் தாண்டும் கடனுக்கும் விண்ணப்பித்திருக்கிறது. இந்த நிதி பாகிஸ்தானின் சுரங்கத் துறைக்கும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் திருப்பு முனையாகப் பார்க்கப்படுகிறது.

உலகளவில் தாமிரத்தேவை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசின் கவனத்தையும் ஈர்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தாமிரம் EV பேட்டரிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தொழில்துறைகளில் மிகப்பெரிய பயன்பாட்டைக் கொண்டிருக்கிறது. மிக முக்கியமாக, உலகளவில் மாறிவரும் தொழில்நுட்பத்தின் காரணமாக, 2050ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 650 மில்லியன் மெட்ரிக் டன் தாமிரம் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2028ம் ஆண்டு முதல் சுரங்கப்பணிகள் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. $6.6 பில்லியன் மதிப்புள்ள இந்த சுரங்கம் அதன் முதல் கட்டத்தில் ஆண்டுக்கு 200,000 டன் தாமிரத்தையும் 250,000 அவுன்ஸ் தங்கத்தையும் உற்பத்தி செய்ய உள்ளது. இதன்காரணமாக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகும். எப்போதுமே பதற்றம் நிறைந்த பகுதியான பலூசிஸ்தான் மாகாண நிலப்பரப்பில் வருவதால், சவால்களும் வலுவாக இருக்கும் என்று தெரிகிறது. வெளியான தகவலைத் தொடர்ந்து, தாமிரம் மற்றும் தங்கம் இருப்பதாக நம்பப்படும் சாகாய் மலைகளின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

உறுதிப்படுத்தப்படும் பொருளாதார வளர்ச்சி

இது தொடர்பாக, பிலிப்பைன்ஸைத் தளமாகக் கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள ரேகோ டிக் (Reko Diq) வெள்ளி-தங்க சுரங்கத்துக்காக 410 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவித் தொகையை வழங்க ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மேலும், ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்குவதன் மூலம் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என்றும் தெரிவித்திருக்கிறது. ஆசிய-பசிபிக் பகுதிகளில் " “responsible and sustainable critical minerals-to-manufacturing value chains” எனும் திட்டத்தைத் தொடங்கியதிலிருந்து ஆசிய வளர்ச்சி வங்கியால் ஆதரிக்கப்படும் முதல் சுரங்கத் திட்டமாகும். இத்திட்டத்திற்கான நிதியுதவி, "மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீடாக இருக்கும்" என்றும் ADB தெரிவித்துள்ளது.

இத்திட்டத்திற்கு எதிர்ப்பும் இல்லாமல் இல்லை.. “ராணுவமயமாக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில் விமர்சனக் குரல்கள் அடக்கப்படும் ஓர் இடத்தில், இவ்வளவு பெரிய அளவில் சர்ச்சைக்குறிய ஒரு திட்டத்தில் முதலீடு செய்வது பேரழிவுக்கான ஒரு செயல்முறையாகும். மக்கள் பேசுவதற்கே அல்லது கேள்விகள் எழுப்புவதற்கே பயப்படுகிற நிலை இருக்கும்போது, கலந்தாலோசனைகளை அர்த்தமுள்ளவை என்று கருத முடியாது” என மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி கூட்டமைப்பின் ஆசிய பிராந்திய ஒருங்கிணைப்பாளர் தாலா படங்கன் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் தரப்பில் இருந்தோ இந்த விவகாரம் நேர்மறையாகவே அணுகப்படுகிறது. இந்தச் சுரங்கத்திலிருந்து கிடைக்கும் வருவாய் அரசின் நிதியை உறுதிப்படுத்தவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், விலையுயர்ந்த எரிபொருள் இறக்குமதிகளை சார்ந்திருப்பதைக் குறைக்கவும் உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதே நேரத்தில் தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருந்தாலும், பாகிஸ்தான் வணிகத்திற்குத் திறந்தே உள்ளது என்று அந்நாட்டு அரசு உலகிற்கு தெரிவிக்கும் சமிஞ்சை ஆகவும் இது பார்க்கப்படுகிறது.

ரெகோ டிக் சுரங்கம் பாகிஸ்தானுக்குப் பொருளாதார ரீதியாக பெருமூச்சு விடுவதற்கான சாத்தியங்களை கொண்டிருக்கிறது. ஆனால், பாதுகாப்பு, மக்கள் நலன், மற்றும் நிலையான வளர்ச்சி என்ற மூன்றின் சமநிலையைப் பாதுகாப்பதே முக்கிய சவாலாக இருக்கும்.