Ships waiting at The Strait of Hormuz  web
உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்.. ஆபத்தில் ரூ.10000 கோடி மதிப்புள்ள இந்திய கப்பல்கள்!

ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் ரூ.10,000 கோடி மதிப்புள்ள இந்திய கப்பல் சரக்குகள் சிக்கிக் கொண்டிருப்பதாக இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

PT WEB

ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியில் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான இந்திய கப்பல் சரக்குகள் ஆபத்தில் உள்ளன. இந்திய கப்பல்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய INSA அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் முக்கியப் பாதையாக உள்ள இந்த ஜலசந்தி மூடப்பட்டதால் ஆபத்துகள் அதிகரித்துள்ளன.

இந்தியக் கொடியுடன் கூடிய 27 கப்பல்கள் தற்போது ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் சிக்கித் தவிப்பதாகவும், ரூ.10,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள கப்பல் சொத்துகள் ஆபத்தில் இருப்பதாகவும் இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் (INSA) தெரிவித்துள்ளது.

Ships waiting at The Strait of Hormuz

ஈரானிய புரட்சிகர காவல் படை, முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டதாக அறிவித்து, அதன் வழியாகச் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலையும் தீக்கிரையாக்குவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, இந்திய கப்பல்களின் பயணத்தை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை கப்பல் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 20% ஓமன் மற்றும் ஈரான் இடையேயான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே செல்கிறது. இந்தியா இறக்குமதி செய்யும் எண்ணெயில் தோராயமாக 40% மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) 50%க்கும் அதிகமானவை இந்தப் பாதை வழியாகவே செல்கின்றன. இதனால் ஆபத்துகள் அதிகம். சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் இந்த ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டனர்

Ships waiting at The Strait of Hormuz

NDTV வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் (INSA), 27 இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் தற்போது இப்பகுதியில் சிக்கித் தவிப்பதாகவும், ரூ.10,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள கப்பல் சொத்துக்கள் ஆபத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு கப்பல் மயிரிழையில் தப்பியதாகவும், ஒரு ஏவுகணை அதை ஒரு சிறிய வித்தியாசத்தில் தவறவிட்டதாகவும் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சில இந்திய கப்பல்கள முக்கியமான எரிசக்தி சரக்குகளை ஏற்றுவதற்காக ஜலசந்தியின் தெற்கே காத்திருக்கின்றன என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் காப்பீட்டுச் செலவுகளில் ஏற்படும் அதிகரிப்பைக் குறிப்பிட்டிருக்கும் கப்பல் உரிமையாளர்களின் அமைப்பு, சிக்கித் தவிக்கும் இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை உறுதிசெய்ய ஈரான் மற்றும் இஸ்ரேலுடன் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது.

உலகளாவிய கப்பல் கண்காணிப்பு புலனாய்வு நிறுவனமான மரைன் டிராஃபிக்கின் நேரடிக் கப்பல்கள் வரைபடம், மத்திய கிழக்கின் முக்கிய துறைமுகங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான மண்டலங்களில் ஏராளமான சரக்குக் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் இயக்கப்படவில்லை என்பதும் தெரிகிறது.

container ship at the Strait of Hormuz

இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள பொருட்கள் துறைமுகங்களிலும் சரக்குக் கப்பல்களிலும் சிக்கித் தவிப்பதாகவும், பெரும்பாலான சரக்குக் கப்பல்கள் மத்திய ஆசிய நாடுகளில் உள்ள முக்கிய துறைமுகங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான மண்டலங்களில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.