தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நேற்று மாலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால், அந்நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், நேற்று மாலை 6:04 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலையில், இரண்டாவது நிலநடுக்கம் அடுத்த 39 வினாடிகளிலேயே ஏற்பட்டது. இது, முதல் நிலநடுக்கத்தைவிட அதிபயங்கரமான 7.5 ரிக்டர் அளவில் இருந்தது. கடந்த ஒரு நூற்றாண்டில் அந்நாடு சந்தித்ததிலேயே மிகப்பெரிய நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இதனால் தலைநகர் கராகஸில் கட்டடங்கள் சேதமடைந்ததோடு, கரீபியன் பகுதியின் சில இடங்களில் சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
இந்த இரட்டை நிலநடுக்கத்தால் இதுவரை குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும், நகரின் பல பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளின் சுவர்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. குறிப்பாக, கராகஸின் தென்கிழக்கு பகுதிகளில் உள்ள பல உயரமான கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. Trujillo, Carabobo, Aragua, Miranda மற்றும் La Guaira ஆகிய பிற மாகாணங்களிலும் கட்டடங்கள் இடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அண்டை மற்றும் பிற சர்வதேச நாடுகளின் மீட்புக் குழுவினரும் உதவிக்காக வெனிசுலா விரைந்துள்ளனர். மறுபுறம், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வெனிசுலா தற்காலிக அதிபர் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும், பாதுகாப்பு கருதி நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அடுத்த சில நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் முதன்மை விமான நிலையமான சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையம் கடுமையான சேதமடைந்ததை அடுத்து, அது உடனடியாக மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே, வெனிசுலாவின் கடுமையான பாதிப்புகள் காரணமாக பெரும் மனிதாபிமானப் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அமைப்பு எச்சரித்துள்ளது. இறுதி உயிரிழப்பு எண்ணிக்கை 10,000 முதல் 100,000 வரை இருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. முன்னதாக, இந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முன்பே கூகுள் தங்களுக்கு எச்சரிக்கை விடுத்ததை சில பயனர்கள் கண்டறிந்துள்ளனர்.