சீனா ஈரானுக்கு ரகசியமாக புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், 2005-க்குப் பிறகு சீனா ஈரானுக்கு நேரடியாக ஆயுதங்களை விற்பனை செய்யவில்லை என்ற கூற்றும் நிலவுகிறது.
ஈரானுக்கு எதிரான போர் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கட்டளைக்குப் பிறகு, இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதைத் தொடர்ந்து நீடிக்காதவண்ணம் இருதரப்பிலும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. அதன்படி, இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எந்த சுமுக உடன்பாடும் எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்கு முன்பாகவே முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்தல், லெபனான் மீதான போர் நிறுத்தம் முதலியவற்றை முக்கியக் கோரிக்கைகளாக ஈரான் வைத்துள்ளது. ஆனால், இதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, வரும் நாட்களில் போர் தீவிரமாகும் எனக் கூறப்படுகிறது. ட்ரம்பும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் தாக்குதல் தொடரும் என எச்சரித்திருந்தார். இதற்கிடையே, அதிபர் ட்ரம்ப் மத்திய கிழக்குப் பகுதிகளுக்கு மேலும் படைகளை அனுப்பி வருகிறார். இது வரும் நாட்களில் மோதல் தீவிரமடைவதற்கான அறிகுறிகளாகவே பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில், சீனா ஈரானுக்கு ரகசியமாக புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. தற்போது, தோளில் வைத்துச் சுடும் வான் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளான மேன்பேட்களை (MANPADs) சீனா ஈரானுக்கு அனுப்ப வாய்ப்புள்ளது என அமெரிக்க உளவுத்துறை தெரிவிப்பதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. வான் பாதுகாப்பு அமைப்புகளின் உண்மையான ஆயுதங்களை மறைப்பதற்காக, அவற்றை மூன்றாம் நாடுகள் வழியாக சீனா அனுப்பக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை தெரிவிக்கிறது. இந்த மேன்பேட்களைப் பயன்படுத்தித்தான் ஈரான் அமெரிக்கா விமானங்களை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்கப் பாதுகாப்புப் படை மதிப்பீட்டின்படி, ஈரானைப் பாதுகாப்பதற்காக சீனா நேரடியாக போரில் விரும்பவில்லை என்றாலும், தனது நெருங்கிய நட்பு நாட்டைப் பாதுகாப்பதற்காக இதைச் செய்ய முயல்வதாக அது தெரிவிக்கிறது. ஈரான் தொடர்ந்து ஆயுதங்களைத் தயாரிக்க உதவும் தொழில்நுட்பத்தை சீனா விற்பனை செய்து வரும் நிலையில், மறைமுகமாக MANPADகளை சீனா ஈரானுக்கு அனுப்பினால் அது மத்திய கிழக்கில் போர் தொடர்வதற்கு வழிவகுக்கும் என்றே கூறப்படுகிறது. அதேநேரத்தில், 2005-க்குப் பிறகு சீனா ஈரானுக்கு நேரடியாக ஆயுதங்களை விற்பனை செய்யவில்லை என்ற கூற்றும் நிலவுகிறது.
மேலும், தற்போதைய இரண்டுவார கால போர் நிறுத்தத்திற்கு சீனாவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. இந்த மோதலுக்கு மத்தியஸ்தம் செய்ய முயன்று வரும் பாகிஸ்தான், உதவிக்காக சீனாவை நாடியபோதுதான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு ஈரானை சீனா தூண்டியதாக நம்பப்படுகிறது. இதை ட்ரம்பும் ஒப்புக்கொண்டிருந்தார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம், ஈரான் ரஷ்யாவிடமிருந்து வெர்பா எனும் ஆளில்லா, குறுகிய தூரம் பாயும் தரை-வான் ஏவுகணை ஏவுதளங்களைப் பெற வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக இருநாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெர்பா, உலகின் மிகவும் திறன் வாய்ந்த, ஆளில்லா வான் பாதுகாப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது.