கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ளதை விட அதிகமாக புதிய வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கூறி இருக்கிறார். "போலி" விளம்பர பிரச்சாரம் தொடர்பாக கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடித்துவிட்டதாக டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் அதிபராக பதவியேற்றத்தில் இருந்து வரிவிதிப்பு குறித்து பல்வேறு முடிவுகளை எடுத்துவருகிறார். குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், டொனால்ட் டிரம்ப், கனடா ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவீத வரியையும், கனடாவிலிருந்து வரும் எரிசக்தி பொருட்கள் ஏற்றுமதிக்கு 10 சதவீத வரியையும் விதித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஆரஞ்சு சாறு, வேர்க்கடலை வெண்ணெய், ஒயின், மதுபானங்கள், பீர், காபி, உபகரணங்கள், ஆடைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களுக்கு கனடா எதிர் வரியை விதித்தது.
எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரியைத் தொடர்ந்து, கனடா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள், கருவிகள், கணினிகள் மற்றும் சர்வர்கள், காட்சி மானிட்டர்கள், விளையாட்டு உபகரணங்கள் மீது 25 சதவீத வரியை விதித்தது.
இந்நிலையில், தற்போது வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிரான விளம்பரம் கனடாவின் ஒண்டாரியோ மாகாண அரசால் வெளியிடப்பட்டது. அதில் மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனல்டு ரீகன், வரி விதிப்பால் அமெரிக்கா பாதிக்கப்படும்’என கூறும் வீடியோ இடம்பெற்றிருந்தது. 1987 ஆம் ஆண்டு ரீகன் வர்த்தகம் குறித்த வானொலி உரையின் மேற்கோள்களை இந்த விளம்பரம் பயன்படுத்தியது. இதனை அடுத்து கனடா மற்றும் அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. "போலி" விளம்பர பிரச்சாரம் தொடர்பாக கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடித்துவிட்டதாக டிரம்ப் கூறினார். தற்போது, கனேடியப் பொருட்களுக்கான வரிகளை 10 சதவீதம் கூடுதலாக விதிப்பதாக கூறினார்.
விமர்சனத்துக்குள்ளான அந்த விளம்பரம் உடனடியாக அகற்றப்பட இருந்தது. ஆனால் அது ஒரு மோசடி என்று தெரிந்தும், நேற்று இரவு உலகத் தொடரின் போது அதை ஒளிபரப்ப அனுமதித்தனர் என்று டிரம்ப் தனது truth சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.