asim muneer - trump web
உலகம்

பாகிஸ்தான் முதுகில் குத்திவிடும்.. டிரம்ப்புக்கு அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஈரானுடன் நெருக்கமாக இருந்ததாகவும், இதனால் அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Praveen Joshva L

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் மோதலை தற்காலிகமாக நிறுத்த பாகிஸ்தான் நடுவராக களமிறங்கிய நிலையில், இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதற்கிடையில், ஈரான் IRGC-வுடன் நெருக்கம் கொண்டதாக கூறப்படும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் டிரம்ப் நெருக்கமாக செயல்படுவது அமெரிக்க உளவுத்துறைக்கு பெரும் சந்தேகத்தையும் Red Flag எச்சரிக்கையையும் எழுப்பியுள்ளது.

ஈரானுக்கும் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் நடைபெற்று வந்த மோதல் 1 மாதத்தை தாண்டியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அமெரிக்கா - ஈரான் ஆகிய இரண்டு தரப்பிடமும் பேசி இரண்டு வாரகால போர் நிறுத்தத்தை கொண்டுவந்தது.

ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல்

பின்னர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரநிதிகள் கலந்துகொண்ட நிலையில், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனினும் தொடர்ந்து பாகிஸ்தான் இரண்டு தரப்பிடமும் போர் நிறுத்தம் தொடர்பாக பேசி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் டிரம்ப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன் நெருக்கமாகச் செயல்படுவது குறித்து அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் Red Flag எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஆசிம் முனீர் 2016-17 காலக்கட்டத்தில் பாகிஸ்தான் உளவுத்துறை தலைவராக இருந்தபோது, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார் என்றும், எனவே, முனீர் அமெரிக்காவுக்கு உண்மையாக இருப்பாரா அல்லது ஈரானின் நலனுக்காகச் செயல்படுவாரா என்ற சந்தேகம் உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசிம் முனீர்

இது குறித்து வெளியான செய்தியில், 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் படைப்பிரிவு முன்னாள் தளபதி காசிம் சுலைமானி (Qassem Soleimani) மற்றும் 2025-ஆம் ஆண்டில் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட தளபதி ஹொசைன் சலாமி (Hossein Salami) ஆகியோருடன் அவர் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படும் நிலையில், அமெரிக்க உளவுத்துறை அவரை ஒரு ஆபத்தான நபர் என்று எச்சரித்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.