கீர் ஸ்டார்மர் - ஹார்முஸ் Pt web
உலகம்

ஹார்முஸைத் திறக்க 40 நாடுகள் ஒன்றிணைவு.. பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் முக்கிய அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணையைத் திறக்கும் நோக்குடன் 40 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன என பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். அதேசமயம், ஈரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையில் பிரிட்டன் இணையாது எனவும் கூறியுள்ளார்.

Premkumar S

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 1 மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வந்த நிலையில், உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கியது. இதனால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் தான், எதிரி நாட்டு கப்பல்களைத் தவிர மற்றக் கப்பல்கள் ஹார்முஸைக் கடக்கலாம் என ஈரான் தெரிவித்தது. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் எரிபொருள் கப்பல்கள் தங்கள் நாடுகளை நோக்கி வரத் தொடங்கியிருக்கின்றன.

ஈரான் - ஹார்முஸ் நீரிணை

இதற்கிடையில், ஹார்முஸை முழுமையாக திறக்க வேண்டும். அணு ஆயுத பயன்பாட்டைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா ஈரானிடம் வலியுறுத்தி வந்த நிலையில், ஈரான் தொடர்ந்து மறுத்து வந்தது. இதனால், மத்தியக் கிழக்கில் தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது. இந்த சூழலில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் ஈரான் அமெரிக்கா இடையேயான 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், மத்தியக் கிழக்கில் சில நாட்கள் அமைதி திரும்பியிருந்தது. தொடர்ந்து, நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நேற்றைய முன் தினம் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் 21 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில், எவ்விதமான உடன்படிக்கையும் ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, எரிபொருள் வர்த்தகம் சீராகும் என உலக நாடுகளின் தலைவர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், ஈரான் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் தான், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஹார்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில், ”ஹார்முஸ் பகுதியில் கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால், சர்வதேச அளவில் வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்துள்ளன. இதைச் சீர்செய்ய உலகளாவிய கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது மிக அவசியம். கடல்சார் பயணச் சுதந்திரத்தை மீட்டெடுக்கும் நோக்கில், பிரிட்டனின் அழைப்பை ஏற்று 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த வாரம் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இணைந்து ஒரு சர்வதேச உச்சிமாநாட்டை நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், இந்த உச்சி மாநாடு சர்வதேச எரிசக்தி சந்தையில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஈரான் அமெரிக்கப் பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவிய நிலையில், ஈரான் துறைமுகங்களைப் பயன்படுத்தும் கப்பல்களை முடக்குவோம் என அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிவிப்பொன்றை இன்று வெளியிட்டிருக்கிறது. மேலும், இந்த முடக்கம் இன்று காலை 10 மணி முதல் அமலாகியிருக்கிறது. இந்த சூழலில், தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், அமெரிக்காவின் கப்பல் முடக்கத்தில் இங்கிலாந்து இணையாது எனவும் ஹார்முஸைத் திறப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தும் எனவும் தெரிவித்திருக்கிறார்.